Skip to main content

இந்தாண்டு ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் இவர் பங்கு பெரியளவில் இருக்கும் - கவாஸ்கர் பேச்சு!!!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Sunil Gavaskar

 

பந்துவீச்சுக்கு உகந்த மைதானங்களில் சாஹலின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றும், அதன் மூலம் அணியின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய வீரராக இந்தாண்டு அவர் இருப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. அனைத்து அணிகளும் வெற்றி முனைப்போடு தீவிர பயிற்சியில் உள்ளனர். கோப்பையை வென்ற அணிகள் மீண்டும் கோப்பையை வெல்லும் நோக்கோடும், இதுவரை வெல்லாத அணிகள் முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றும் நோக்கோடும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியினர், இந்தாண்டு கோப்பையைக் கைப்பற்றி தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்தைத் தவிர்க்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான கவாஸ்கர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "பெங்களூர் அணி இதுவரை ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பது புதிராகவே உள்ளது. விராட் கோலி, ட்வில்லியர்ஸ் போன்ற வீரர்களைக் கொண்ட அணிக்கு ரன் பற்றாக்குறை ஏற்படாது. இதுவே அவர்களுக்கு பாதகமான ஒன்றாகவும் இருக்கிறது. இவர்கள் இருவரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை என்றால் பின் வரிசையில் வரும் வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கத் தவறி விடுகின்றனர். இந்தாண்டு புதிய பயிற்சியாளரின் வருகை அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கலாம். பந்துவீச்சுக்கு உகந்த அமீரக மைதானங்களில் சஹாலின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும். இந்தாண்டு வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய வீரராக அவர் இருப்பார்" எனக் கூறினார்.

 

பெங்களூர் அணி தன்னுடைய முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் 21-ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.