Skip to main content

அர்ஜெண்டினா தப்புமா? மெஸ்ஸிக்கு வாழ்வா சாவா போட்டி!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018

உலக கால்பந்தாட்டப் போட்டி லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி இன்று குரேஷியாவை எதிர்கொள்கிறது.
 

messi

 

 

 

குரூப் டி பிரிவில் இடம்பெற்றிருக்கும் அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதும் லீக் போட்டி, இன்று நோவாகிரேட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் மட்டுமே அர்ஜெண்டினா அணி தொடரில் நீடிக்கும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தகுதிபெற்றிருக்கும் ஐஸ்லாந்து அணியுடன், அர்ஜெண்டினா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஒரேயொரு கோல் கூட அடிக்காமல், பெனால்டி சூட்டையும் மிஸ் செய்து ஏமாற்றினார். இதனால், அர்ஜெண்டினா அணிக்கு ஒரேயொரு புள்ளி மட்டுமே கிடைத்தது.
 


இந்நிலையில், குரேஷியாவுடனான இன்றைய போட்டியில் ஜெயித்தால் மட்டுமே அர்ஜெண்டினா அணியால் உலகக்கோப்பை கனவை நீட்டிக்க முடியும். குறிப்பாக குரேஷியா அணி அதன் முந்தைய ஆட்டமான நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில், 2 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் உலகக்கோப்பையில் ஐந்துமுறை மோதியுள்ளன. அதில் அர்ஜெண்டினா இரண்டு மற்றும் குரேஷியா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தில், கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்ற மெஸ்ஸியின் வாக்கு நிஜமாகுமா? அர்ஜெண்டினா அணி தொடரில் நீடிக்குமா? என்பது இன்றைய போட்டியின் இறுதியில் தெரிந்துவிடும்.  
 

Next Story

மெஸ்ஸி பெயருக்கு இவ்வளவு பவரா?; சாதுரியமாக தப்பித்த மூதாட்டி

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில், அர்ஜெண்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி, ஹமாஸ் படையினரிடம் இருந்து சாதுரியமாக தப்பித்த 90 வயது மூதாட்டியின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பித்த மூதாட்டி எஸ்டர் குனியோ கூறுகையில், “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரு நாள் காலை என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து எனது குடும்பம் எங்கே? என்று கேட்டனர். அதற்கு நான் மட்டும் தான் தனியாக இருக்கிறேன் என்று எனது மொழியில் கூறினேன். எனக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் என் மீது கோபமாகி எந்த மொழியில் பேசுகிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு நான் அர்ஜெண்டினாவில், ஸ்பானிஷ் மொழியில் பேசுகிறேன் என்று கூறினேன். அதற்கு அர்ஜெண்டினா என்றால் என்ன..? என ஒருவர் கேட்டார்.

 An old lady who cleverly escaped from Hamas soldiers because Is Messi name?;

நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா..? அதில் வரும் மெஸ்ஸியின் ஊர்தான் எனது ஊர் என தெரிவித்தேன். அதை கூறியதும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை என்னிடம் கொடுத்துவிட்டு என்னுடன் செல்பி எடுத்துவிட்டு சென்றனர். நான் மெஸ்ஸியின் பெயரை குறிப்பிட்டதால் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று கூறினார். ஹமாஸ் படையினரால் கடத்தப்பட இருந்த மூதாட்டி, பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் காப்பாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குட்டையன்; அணிக்கு வேண்டாம் என்று புறக்கணிக்கப்பட்டவன் - உலகக்கோப்பை கால்பந்து நாயகன் ‘மெஸ்ஸி’

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

World Cup Football Hero " Lionel Messi" Motivation journey

 

22வது உலகக் கோப்பை கால்பந்தின் கோப்பையை வென்ற நாயகன்; உலகமெங்கும் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் கால்பந்து வீரன்; அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற இன்றைய புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் மெஸ்ஸியின் வாழ்க்கைப் பயணம் என்பது அவர் விளையாடும் மைதானத்தைப் போல சமதளமானதல்ல; அது மேடு பள்ளமும் ஏற்ற இறக்கமும் நிறைந்தது.

 

மெஸ்ஸி கோப்பையைக் கைகளில் ஏந்த வேண்டும் என்றும், அதைப் பார்க்க வேண்டுமென்றும் உலகமெங்கும் ஏங்கிய ரசிகர்கள் கோடிக்கணக்கானோர். ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார் என்பதற்குப் பின்னே அந்த வீரன் சந்தித்த அவமானங்களும் புறக்கணிப்புகளுமே காரணமாக இருக்கிறது.

 

சாதாரண கூலித்தொழிலாளியான அப்பாவுக்கும் தூய்மைப் பணி செய்யும் அம்மாவுக்கும் பிறந்த மெஸ்ஸி., சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது ஆர்வத்துடன் விளையாடி வந்திருக்கிறார். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றதும் அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த மெஸ்ஸியை அவரது பாட்டி கால்பந்து விளையாட ஊக்குவித்து இருக்கிறார். அத்தோடு  “நீ பெரிய கால்பந்து வீரனாக வருவ” என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

 

சிறிய வயதிலேயே திறமையாக விளையாடிய மெஸ்ஸிக்கு 11 வயதில்தான் தான் பாதிக்கப்பட்டிருந்த நோயைப் பற்றித் தெரிய வந்தது. மெஸ்ஸி இனிமேல் உயரமாக வளரவேமாட்டான் என்றும்; அப்படி ஒருவேளை வளர வேண்டுமென்றால் மாதம் ஒருமுறை இந்திய மதிப்பிற்கு கிட்டத்தட்ட 70ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசியைத் தொடைகளில் போட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதுவும் ஒரு சதவீதம்தான் வளர்ச்சி மாற்றம் நடக்கவும் வாய்ப்புள்ளது என்றிருக்கிறார்கள்.

 

அடிப்படை வாழ்வாதாரத்திற்கே தவித்த மெஸ்ஸியின் பெற்றோர்களுக்கு இந்தச் செய்தி இடியாக இறங்கியது. ஆனாலும் மெஸ்ஸியின் விளையாட்டைப் பார்த்த ஸ்பெயின் கால்பந்து கிளப் பயிற்சியாளர் கார்லஸ், ஸ்பெயின் கிளப்பிற்காக விளையாட மெஸ்ஸியின் தந்தையை அணுகுகிறார். அத்தோடு மருத்துவச் செலவையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

 

அர்ஜெண்டினாவிலிருந்து ஸ்பெயினுக்கு கால்பந்து விளையாடுவதற்காகக் குடிபெயர்ந்த மெஸ்ஸிக்கு அங்கே அவமானமும் புறக்கணிப்பும் காத்திருந்தது. “இந்தக் குட்டையனை ஏன் நமது கிளப்பிற்குச் செலவு செய்து கூட்டி வந்தீர்கள்” என்றும் “இவனால எல்லாம் விளையாட முடியுமா” என்றும் பயிற்சி பெற்றும் போட்டி நடக்கும்போது மைதானத்திற்குள் இறக்காமல் மைதானத்திற்கு வெளியேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

 

World Cup Football Hero " Lionel Messi" Motivation journey

 

தொடைகளில் போட்ட ஊசியைத் தாங்கிய வலி ஒரு புறமும்; குட்டையன் குட்டையன் எனக் கூப்பிடப்படும் அவமானம் ஒரு புறமும்; மைதானத்திற்குள் இறக்காமல் வைத்திருந்த புறக்கணிப்பு ஒருபுறமும் என பல்வேறு வலிகளையும் தாங்கிக் கொண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு ஈடு இணையற்ற வீரனாய் தன்னை தயார்படுத்திக்கொண்டார் மெஸ்ஸி.

 

அதற்குப் பிறகு கால்பந்தினை உதைத்து உதைத்து தன் கோவத்தையெல்லாம் காட்டிய அந்த வீரன் உதைத்த பந்தெல்லாம் கோல்களாக மாறியது; பல கிளப்புகள் போட்டி போட்டுக் கொண்டு மெஸ்ஸியை ஏலத்தில் எடுக்க வந்தார்கள்.

 

சில போட்டிகளில் தன்னை நிரூபிக்க முடியாததால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா “கால்பந்து கூட்டு உழைப்பு; நீங்கள் மட்டும் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியதில்லை; தொடர்ந்து விளையாடுங்கள்” என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தொடர்ந்து விளையாடினார். 2022-ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த அர்ஜெண்டினா அணி அடுத்தடுத்த அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸை வென்று வெற்றி வாகை சூடியது.

 

உலகமே எதிர்பார்த்த அந்த நொடி நடந்தேறியது. வெற்றிக் கோப்பையை வாங்கியதும் முத்தமிட்டு மெல்ல நடந்து வந்து தன் அணியோடு சேர்ந்து நின்ற மெஸ்ஸி கோப்பையை உயர்த்திய அந்த நொடி உலகமெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது என்றால் மிகையாகாது.

 

World Cup Football Hero " Lionel Messi" Motivation journey

குட்டையன், குட்டையன் என்று சொல்லிய வாய்களெல்லாம் மெஸ்ஸி மெஸ்ஸி என்று சொல்ல வைத்த அந்த விளையாட்டு வீரனின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

 

Lionel Messi - Greatest Of All Time !