Skip to main content

குடிப்பழக்கத்தைத் திருத்தும் கொஞ்சிக்குப்பம் வீரபத்திர அய்யனார்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 Konchikuppam Veerabhatra Ayyan who corrects drinking habits

 

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. ஆனால் அரசாங்கமே வருமானத்திற்காக மது விற்பனை செய்கிறது. இதனால் பலர் நிரந்தர குடிகாரர்களாக மாறி, லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிகின்றன. குடியினால் குடல் வெந்து நோய்களுக்கு ஆளாகி குடும்பத் தலைவர்கள் இறந்துபோவதால், விதவையான பெண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. விதவைகள் மட்டுமே வாழும் பகுதிகளாக பல தமிழக கிராமங்கள் மாறிவருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் போதைக்கு ஆளாகி சீரழிகிறார்கள். இதற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல.

 

கோவில் திருவிழா, குடும்ப விசேஷங்கள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் மது விருந்துதான் களைகட்டி வருகிறது. நண்பர்கள் மட்டுமின்றி, மாமன், மைத்துனன், அண்ணன், தம்பி என்ற உறவுகள் கூட கூடிக் குடிக்கிறார்கள். குடும்பப் பிரச்சினை, கலவரம், தற்கொலை, எய்ட்ஸ் நோய் போன்றவற்றால் இறப்பவர்களைவிட மிக அதிக அளவில் மதுவினால் இறக்கிறார்கள். இதை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 

 

மதுவால் குடும்பச் சீரழிவும், பள்ளி, கல்லூரிப் பிள்ளைகளின் படிப்பும் பாழாகி வருகிறது. திறமையுள்ள பல மனிதர்கள் மதுவினால் அழிந்து போவதால் மனித வளம், உழைப்பு பாழாகிறது. இப்படி மது அரக்கனின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் தமிழக மக்களைக் காப்பாற்ற பல நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தும் போராடி வருகிறார்கள். மது இல்லா தமிழகத்தை உருவாக்க மதுவுக்கு எதிராகப் பலர் பல இயக்கங்களை உருவாக்கிப் போராடி வரும் நிலையில், தெய்வமும் தன் பங்கிற்குப் போராடி வருகிறது. ஆம்; தீராத மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு வருகிறார்கள் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திரர் ஆகிய தெய்வங்கள்.

 

இவ்வாலயத்தில் பூரணி, பொற்கலையோடு அய்யனார் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாலயப் பூசாரி ஒருவர் குடிபோதைக்கு அடிமையான ஒருவரை அய்யனாரின் அனுமதியோடு வீரபத்திரசாமி முன்பு அமரவைத்து, "இனி குடிக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்யச்சொல்லி, சாமி முன்புள்ள சிவப்புக் கயிறை அவரது வலது கையில் கட்டிவிட்டார். அப்போது முதல் அந்த மனிதர் குடிப்பதையே மறந்துபோனாராம். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவியது. அன்று முதல் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திர சாமிகள் புகழ் பரவ ஆரம்பித்தது.

 

இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராசுவிடம் கேட்டோம். “ஒரு காலத்தில் கொஞ்சிமரங்கள் சூழ்ந்த காடாக இருந்துள்ளது இப்பகுதி. அந்தக் காட்டைத் திருத்தி எங்கள் முன்னோர்கள் இங்கு குடியேறியுள்ளனர். அதனால் ஊருக்கு கொஞ்சிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் எனது தந்தை அழகன் இக்கோவிலையும் இங்குள்ள விநாயகர், அய்யனார், வீரபத்திரர் மற்றும் பரிவார தெய்வங்களாக துர்க்கை, மாரியம்மன், முருகன் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்தார். ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் வெளியூரிலிருந்தும் வந்து வழிபட ஆரம்பித்தனர். தற்போது ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பரம்பரை தர்மகர்த்தா வகையில் இப்போது நான் இருந்து வருகிறேன். இங்கு வரும் பக்தர்களுக்கு தினசரி மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது'' என்றார் அவர்.

 

 Konchikuppam Veerabhatra Ayyan who corrects drinking habits

 

கோவில் பூசாரி பார்த்தசாரதி, “இக்கோவில் தெய்வங்கள் சக்திமிக்கவை. அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கேட்டது கிடைக்கும்; நினைத்தது நடக்கும். மதுபோதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டுவர இங்குள்ள அய்யனாரின் முன்பு வணங்கி, பின்பு 50 ரூபாய் பணம் கட்டி ரசீது வாங்கிச் சென்று வீரபத்திரசாமிக்கு அர்ச்சனை செய்த பின்பு அவர்முன் அமர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும். ‘ஆகாயம், பூமாதேவி, வீரபத்திரசாமி சாட்சியாக என்னைப் பெற்ற தாய், தந்தை மீது சத்தியம் செய்கிறேன். இனிமேல் எப்போதும் குடிக்க மாட்டேன்' என்று மூன்று முறை உறுதிமொழி எடுத்து சத்தியம் செய்வார்கள். அதன்பிறகு அவர்கள் கையில் வீரபத்திரசாமியின் சிவப்புக் கயிறு கட்டப்படும். இப்படி கட்டிய பிறகு பெரும்பாலும் யாரும் குடிக்கமாட்டார்கள். அதையும் மீறி குடிப்பவர்கள் உடல்நிலை பாதிக்கப்படும். சில ஆயிரம் முதல் பல லட்சம்வரை செலவு செய்ய நேரிடுகிறது. இதை அனுபவப்பூர்வமாகப் பார்த்தவர்கள் மீண்டும் குடிப்பதில்லை. இங்கு வந்து கயிறு கட்டிய பிறகு மதுவை மறந்து நல்ல முறையில் வாழ்கிறார்கள். இப்படி பல்லாயிரம் குடும்பங்கள் நிம்மதி அடைந்துள்ளன. இதன் பலனை அறிந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்ல, தினசரி சுமார் 200 பேருக்கு மேல் கயிறுகட்ட இங்கு வந்தவண்ணம் உள்ளனர். காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலுமே கோவில் திறந்திருக்கும்.

 

மதுப்பழக்கத்தைத் தடுப்பதோடு, இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு திருமணத்தடை நீக்கம், குழந்தைப் பேறு, திருட்டுப்போன பொருட்கள் கிடைத்தல் என அனைத்தும் நிறைவேறுகின்றன. உதாரணமாக, அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்குத் திருமணமாகி இருபது ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இங்கு வந்து வேண்டுதல் செய்த பிறகு குழந்தை பிறந்துள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த என்.எல்.சி ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை திருட்டுப்போனது. இங்கு வந்த பிறகு சில நாட்களுக்குள் அந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு ஆண், பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி திருமணம் நடந்துள்ளது. எங்கள் கொஞ்சிக்குப்பம் அய்யனார், வீரபத்திர சாமிகளின் பெருமை தமிழக அளவில் பரவியுள்ளது என்பதற்கு தினசரி சென்னை உட்பட பல மாவட்ட மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதே சாட்சி'' என்கிறார்.

 

"பலரது உடல்நிலை பாதிப்பதோடு இறப்பதும், குடும்பங்கள் சீரழிவதும், பல குற்றங்கள் நடப்பதும் மதுவினால் தான். மனிதனால் மாற்ற முடியாத அந்தப் பழக்கத்தை தெய்வம் மாற்றுகிறது” என்று மெய்சிலிர்ப்போடு பேசுகிறார்கள் ஊர்மக்கள். அமைவிடம்: மதுவுக்கு அடிமையானவர்களை மீட்கும் அய்யனார் ஆலயம் விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், பண்ருட்டிக்கு தெற்கே 11 கிலோமீட்டரிலும், வடலூருக்கு வடக்கே 13 கிலோமீட்டரிலும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.