சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ள சூழலில், அந்த கப்பலில் உள்ள ஏழு இந்தியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20-ம் தேதி 3,700 பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமா நகரில் இருந்து ஹாங்காங் புறப்பட்டது டைமண்ட் பிரின்சஸ் கப்பல். பின்னர் ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு திரும்பும்போது, கப்பலில் இருந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜப்பானுக்கு வந்த அந்த கப்பலுக்கு பிப்.1-ம்தேதி அனுமதி மறுக்கப்பட்டது.
அதன்பிறகு பயணிகளுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதில், இதுவரை 621 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 138 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதில் தற்போது ஏழு இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.