![Indian woman falls into a ditch in Kuala Lumpur](http://image.nakkheeran.in/cdn/farfuture/T3YBPEhVqs56yNd-OJJa2jQHqx9STQlX7rhfPP8_wlo/1724743540/sites/default/files/inline-images/16_177.jpg)
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு விஜயலட்சுமி என்ற 48 வயது பெண் ஒருவர் சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(23.8.2024) அன்று விஜயலட்சுமி அருகே உள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது கோலாலம்பூரின் பிரதான வர்த்தக பகுதியான ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள நடைபாதையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கிக்கொண்டு விஜயலட்சுமி குழிக்குள் விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக வந்த மீட்புக் குழுவினர், நடவடிக்கைகளில் இறங்கினர். பள்ளத்தில், சிக்கியுள்ள விஜயலட்சுமியை மீட்புப் படையினர் தேட தொடங்கினர். கீழே பாதாள சாக்கடையுடன் மழை நீரும் அடித்துச் செல்வதால் விஜயலட்சுமியைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 5வது நாளாகத் தொடரும் மீட்புப் பணியில், இதுவரை அவரது காலணி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மழைநீரைத் தடுக்கும் வகையில் சாக்கடைகளில் 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் போடப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விஜயலட்சுமியை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் விஜயலட்சுமியை மீட்கும் வரை தேடுதல் பணி காலவரையின்றி தொடரும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
![Indian woman falls into a ditch in Kuala Lumpur](http://image.nakkheeran.in/cdn/farfuture/scTSr-yZ6MH0_ZtY-y1_AzVZ_qGi0HVo68d775fOP20/1724743554/sites/default/files/inline-images/15_148.jpg)
இதனிடையே மீட்புப் பணி நடைபெறும் இடத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.என்.ராயர், செனட்டர் டாக்டர். லிங்கேஸ்வரன் ஆர் டத்தோஸ்ரீ அருணாசலம், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், வழக்கறிஞர் மகேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் கோலாலம்பூரின் உள்கட்டமைப்பின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாக மக்கள் கூறுகின்றனர்.