Skip to main content

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு; அதிர்வலையை ஏற்படுத்திய அமெரிக்கா!

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
Firing Again at Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது.

இத்தகைய சூழலில் தான்,  கடந்த ஜூலை 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இதனால் காயமடைந்த டிரம்ப் பாதுகாப்பு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நபரை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து, அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியை சார்பாக தற்போதைய துணை அதிபரரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பைடன் வேட்பாளராக இருந்த போது ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தலில் ட்ரம்புக்கு நெருக்கடி இருப்பதாக அமெரிக்க அரசியலை உற்றுநோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Firing Again at Donald Trump

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஃபுளோரிடா மாகாணத்தின் உள்ள கோல்ஃப் கிளப்பில், நேற்று இந்திய நேரப்படி சுமார் 11:30 மணியளவில் டொனால்ட் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, டொனால்ட் டிரம்ப்பை குறி வைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து, அந்த இடத்திற்கு போலீசார் விரைவதற்குள், அந்த நபர் காரில் தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக போலீசார், அவரை துரத்தி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் டிரம்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது, ‘அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாதி. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்