
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இந்த ஆய்வு திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுமார் 9 மாதங்களாக இருவரும் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் அளிக்காமல் போனது. இதன் காரணமாக, விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. அதன்படி கடந்த 13ஆம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு விண்ணில் செல்லவிருந்த ஸ்பேஸ் எக்ஸ் - டிராகன் - ‘க்ரூ’ 10 எனும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஸ்பேஸ் எக்ஸ்- டிராகன்- ‘க்ரூ' 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நேற்று (15-03-25) அதிகாலை 4.33 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் நாசாவின் விண்வெளி வீரர்கள் நான்கு பேர் சர்வதேச விமான விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள விண்வெளி மையத்தை சுமார் 6 மணி நேரத்தில் டிராகன் - ‘க்ரூ’ விண்கலம் அடைந்திருந்தது. இந்நிலையில் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கும் பணியான டாக்கிங் இந்திய நேரப்படி இன்று காலை 9:37 மணிக்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து வரும் 19ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நிலவும் வானிலை மாற்றங்களை பொறுத்து விண்கலமானது தரையிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.