Skip to main content

ஒரு வார்த்தையால் திருமணமாகி மூன்றே நிமிடங்களில் பிரிந்த தம்பதி...

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

kk

 

குவைத் நாட்டைச் சேர்ந்த இருவர் சில தினங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணமும் செய்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்ட மூன்றாவது நிமிடமே விவாகரத்தும் பெற்றுள்ளனர். 

 

திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த இருவரும் நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கணவர், மனைவியை ‘முட்டாள்’ என்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த மனைவி திருமணத்தை நடத்தி வைத்த நீதிபதியிடமே திருமணத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். அதனை ஏற்ற நீதிபதி, திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்டு விவாகரத்து என்று அறிவித்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே திருமண வாழ்வை வாழ்ந்துள்ளனர். அதேசமயம் இதுபோல் நடப்பது குவைத்து வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத அரசியல்” - லால் சலாம் படத்திற்கு தடை விதிப்பு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
lal salaam movie release issue in kuwait

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” என பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், ரஜினி, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என விளக்கம் அளித்திருந்தார்.  

இதனிடையே இப்படத்தில் 7ஆம் அறிவு, ராஜா ராணி, உள்ளிட்ட சில படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர், 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தமிழர்கள் குறித்து பதிவிட்ட ஸ்க்ரீன் ஷாட் ஒன்று பலராலும் பகிரப்பட்டு தமிழர்களை இழிவு படுத்தி கருத்து தெரிவித்த தன்யாவுக்கு எப்படி இப்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக கடும் விமர்சனம் எழுந்தது. பின்பு அவரே, “தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல” என தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார். 

இப்படி சில சர்ச்சைகளில் படம் சிக்கி வந்த நிலையில் இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குவைத் நாட்டில் இப்படத்தில் விளையாட்டு தொடர்பான மத அரசியல் பேசப்பட்டுவுள்ளதாக தெரிவித்து படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“உங்களின் பிரச்சனையை நிச்சயமாக மத்திய அரசிடம் கொண்டு செல்வேன்” - குவைத் நாட்டில் பேசிய திமுக எம்.பி

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

dmk mp abudulla talk about kuwait Overseas Tamils Welfare Trust

 

தமிழ்நாட்டில் திமுக சார்பில்  தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்,  திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இந்த விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

 

இந்நிலையில், குவைத் நாட்டின் மகா புல்லா பகுதியில் திமுக அயலக அணி சார்பில் கடந்த 28ஆம் தேதியன்று  முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர்  துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குவைத் நாட்டிற்கு சென்ற எம்.எம். அப்துல்லாவை வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.

 

அது மட்டுமல்லாது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் பிரச்சார இயக்கம் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவிடம் விளக்கப்பட்டது. மேலும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய கையெழுத்தைப் பதிவு செய்துள்ளார். “எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது மத்திய அரசின் கவனத்திற்கு இந்தப் பிரச்சனையை நிச்சயமாகக் கொண்டு செல்வேன்” என்றும் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையின் குவைத் மண்டல தலைவர் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. மேலும், செயலாளர் திருச்சி முபாரக், பொருளாளர் திருமா இருளப்பன்,  மூத்த நிர்வாகி தேசம் மாடசாமி,  இணை ஒருங்கிணைப்பாளர் பீர் முகம்மது, தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை மரைக்காயர், செயற்குழு உறுப்பினர் அய்யப்பன், ஊடக அணி செயலாளர் பக்ருதீன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.