
சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 104, வார்னர் 83, லாபுஷேன் 70, மேக்ஸ்வேல் 63, பிஞ்ச் 60 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய நிலையில், இந்தியா தோல்வியைச் சந்தித்தது.

இந்த மேட்சில் இந்தியா தோல்வியைத் தழுவினாலும் மைதானத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் அங்கு இருந்தோரை ஆச்சர்யப்படுத்தியது. இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தனது தோழியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பெண் ரசிகர் ஒருவருக்கு மைதானத்திலேயே லவ் ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த பெண்ணும் அவரின் காதலை அந்த இடத்திலேயே ஏற்றுக் கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தும் விதமாக கட்டித் தழுவி காதலை வெளிப்படுத்தியுள்ளார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் சமூக வலைத்தளப் பக்கத்தில் அந்த வீடியோவானது வெளியிடப்பட்டுள்ளது. மேட்சில் தோல்வியடைந்தாலும் காதலில் வெற்றி பெற்றுள்ளது இந்தியா.