Skip to main content

பைக் திருடர்களை காட்டி கொடுத்த இளைஞர் கொடூர கொலை!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

bike youngster incident in vilupuram

 

விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் அருண் (21). விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ வரலாறு படித்து வந்த அருணின் இருசக்கர வாகனம் காணாமல் போனது. இது தொடர்பாக அருண் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது இருசக்கர வாகனத்தை திருடியதில் தனது கிராமத்தைச் சேர்ந்த 4 பேரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய, அருண் அவர்களுடன் செல்போனில் பேசிய குரல் பதிவை போலீசாரிடம் ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.

 

இதனையடுத்து அந்த கிராமத்திற்குச் சென்ற போலீசார் வீரமணி, சத்தியா, சரத்ராஜ், கீர்த்தி வர்மன் ஆகிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரு சக்கர வாகனத்தை நாங்கள் திருடவில்லை என அவர்கள் போலீசாரிடம் கூறியதையடுத்து போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். தங்கள் மீது புகாரளித்த அருண் மீது ஆத்திரம் கொண்ட நான்கு பேரும் மேலும் சில கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு 'இருசக்கர வாகனத்தை நாங்கள் தான் திருடினோம் அதைத் திருப்பி தருகிறோம் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வா' எனக் கூறியுள்ளனர்.

 

மாணவன் அருணும் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்ற நிலையில் பணப்பாக்கம் ஏரிக்கரையில் வைத்து அருணின் கழுத்தை நெரித்து கொலை செய்த அந்த கும்பல் அருணின் ஆடைகளைக்  களைந்து உள்ளாடைகளுடன் சடலத்தை பணப்பாக்கம் ஏரியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றனர்.

 

இக்கொலையில் ஈடுபட்ட கும்பலில் இருந்த சத்தியா என்ற இளைஞன் கிராமத்திற்கு வந்து போதையில் கொலை செய்ததை உளறியுள்ளான். உடனடியாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கும்பலை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கொலை செய்து பணப்பாக்கம் ஏரியில் வீசப்பட்ட அருணின் சடலத்தை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டதில் இன்னும் பல நபர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும், அதுவரை மாணவனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.