![young girl complained to the battalion guard that she was in love and cheated](http://image.nakkheeran.in/cdn/farfuture/ESWDceuW6XresO5-cy8kwEwSQ5w7qmpNMQ67kHBcd54/1687430124/sites/default/files/inline-images/998_111.jpg)
சேலம் அருகே, தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டதாகப் பட்டாலியன் காவலர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தைச் சேர்ந்தவர் வினோதா (19 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: “நானும், பட்டாலியன் காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் ஒருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தோம். அவர் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் நான் அவரிடம் நெருங்கிப் பழகினேன். பலமுறை தனிமையில் இருவரும் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆனால் திடீரென்று அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சேலம் பட்டாலியனில் பணியாற்றி வரும் அந்த காவலரை, மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, காதலித்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அந்தக் காவலர், தன் மீது புகார் அளித்த வினோதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வாலிபரை தன்னுடன் அழைத்து வந்திருந்த காவலர், இவர்தான் அந்தப் பெண்ணின் கணவர் என்றும் காண்பித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு அந்த வாலிபர், வினோதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த இளைஞர், அவருக்கு சித்தப்பா உறவு முறை என்பதாலும், அப்போது நடந்தது குழந்தைத் திருமணம் என்பதாலும் இருதரப்பு உறவினர்களிடமும் மோதல் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பு உறவினர்களும் கூடிப்பேசி அவர்களைப் பிரித்துவிட்டனர். அதன் பிறகுதான் வினோதா என்னுடன் பழகி வந்தார் என்றும் காவலர் கூறியுள்ளார்.
இதையடுத்து, இளம்பெண்ணை காதலித்தும் நெருக்கமாகப் பழகியும் ஏமாற்றிவிட்டதாகக் காவலர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக, புகார் அளித்த வினோதா, காவலரை கைது செய்தால் அவர் சிறைக்குச் செல்வதோடு, வேலையும் பறி போய்விடும். அதனால் அவரை கைது செய்ய வேண்டாம் என்றும், தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கூறினார். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் மகளிர் காவல்துறையினர் குடும்ப நல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.