Skip to main content

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழு கலைப்பு 

Published on 05/07/2020 | Edited on 05/07/2020
Villupuram District

 

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் முதன் முதலாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் ஒவ்வொரு காவல் நிலையத்தின் பகுதிகளிலுள்ள கிராமப்புறங்களிலிருந்து இளைஞர்களைத் தேர்வு செய்து போலீஸ் நண்பர்கள் குழு என்று உருவாக்கப்பட்டது. இதே போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்று குழு உருவாக்கப்பட்டது 

 

இந்த குழுவினர் காவல்துறையுடன் இணைந்து திருவிழாக்கள் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள் போக்குவரத்து நெரிசல் இதுபோன்ற பணிகளில் அவர்களைப் பயன்படுத்தி வந்தனர். மேலும் இவர்கள் கிராமப்புறங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களை சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக காரணமான தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்தனர்.

 

ஆனால் காலப்போக்கில் இவர்கள் காவல்துறை உடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் சமூக விரோதிகளுக்கும் காவல்துறைக்கும் இணைப்பு பாலமாக இருந்து பல தவறான செயல்களுக்கு துணை போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இவர்கள் வாகனங்களில் f.b போலீஸ் என்று ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு அவர்கள் உண்மையான போலீஸ்காரர்கள் போல மக்களை மிரட்டுவது கிராமங்களில் உலா வருவது அப்பாவி மக்களிடம் அலப்பறை செய்வதுமாக இருந்துள்ளதாக  காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார்கள்  சென்றன.


 
இதன் உச்சகட்டமாக சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து இறந்த இந்த சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ) போலீஸ் நண்பர்கள் குழுவை முற்றிலும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

 

காவல்துறையினருக்கு உதவி தேவைப்பட்டால் முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் இவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று திருச்சி அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை தடை செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்