Skip to main content

நெருக்கடி கொடுக்கிறதா பா.ஜ.க.? வைகைச்செல்வன் பேட்டி

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
Vaigai Chelvan




இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச் செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
 


ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என டிசம்பர் 3ம் தேதி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதி இருந்தார். அப்படி இருந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக அரசின் கடிதத்தை புறந்தள்ளியதா தேர்தல் ஆணையம்?
 


கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு முழுமையான நிவாரணப் பணிகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் டிசம்பர் 3ஆம் தேதி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஓரளவு ஏற்றுக்கொண்டது.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கான மேல்முறையீட்டுக்கு காலஅவகாசம் இருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆகவே 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இந்திய தேர்தல் ஆணையம் தனது சட்டத்தின் அடிப்படையில் தேர்தலை அறிவித்தார்கள்.
 


இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை கண்டு அச்சமடைந்தது. இடைத்தேர்தல் திமுகவுக்கு ஒரு பின்னடைவாக ஆகிவிடுமோ என்ற ஒரு அச்சத்தின் காரணமாகவும் தொடர்ந்து இந்த தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது. 
 


திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான பணிகளில் அவர்கள் ஈடுபட்டார்களே?



தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டது. அதன் அடிப்படையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவை கேட்டுக்கொண்டு, அவர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலே மனு அளித்து அது தமிழ்நாட்டுக்கு வந்து, அது தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டு, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என்ற நிலைப்பாடு வரும்போதுகூட திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரிடமும் இதுகுறித்து கருத்து கேட்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார். ஆக இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளலாம். தேர்தலை தள்ளிவைக்கும் மனநிலைக்கு திமுக வந்துவிட்டது என்று. 


இடைத்தேர்தல் ரத்து என்றதும், அதனை திமுக தலைவர் வரவேற்றிருக்கிறார். எங்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் இப்போது வேண்டாம் என்று கடிதம் எழுதினோம். அதனை மீறி தேர்தல் அறிவித்தபிறகு அதனை சந்திக்க தயாராக இருந்தோம். ஆனால் அந்த தேர்தலை முழுமையாக தள்ளிவைப்பதற்கு காரணமாக இருந்தது திமுக மற்றும் எதிர்க்கட்சிகள்.


இடைத்தேர்தல் நடக்காது என தெரிந்துதான் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி செய்ததா அதிமுக?
 

அப்படி காரணம் இல்லை. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு அளிக்கலாம் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாள் போதிய காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு நேர்காணல் நடத்தப்பட்டது. வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிறு அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறோம் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அதிமுக அல்ல.
 

கூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுக்கிறதா?


பாஜக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.


கூட்டணி வைக்கவில்லை என்றால் இடைத்தேர்தல்தான் என்று பாஜக மிரட்டுவதாக பரவலாக பேச்சு இருக்கிறதே?


பாஜகவுடன் நாங்கள் தொடர்ந்து ராஜரீதியான நட்பை பேணிக்காத்து வருகிறோம். கூட்டணி வைப்பதா? வேண்டாமா? என்பதை எங்களது தலைமைதான் இறுதி முடிவு செய்யும். அதற்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அதுகுறித்தான கள நிலவரத்தை அறிந்துதான் அதற்கு உரிய இறுதி முடிவை அதிமுக தலைமை முடிவு செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.