Skip to main content

“ உதவாத காப்பீடு..! சக காவலர்களிடம் கையேந்தும் அவலம்..!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்-2016-ன் படி ஒவ்வொரு போலீஸ்காரரும் அதிகபட்சம் ரூ.7.50 லட்சம் அளவுக்கு மருத்துவ சிகிச்சை பெறலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன வென்றால், போலீஸ்காரர்கள் பலர் இந்த திட்டத்தால் பயனில்லை என்கின்றனர்.

 

police

 

“புற்றுநோய், தீக்காயம், எழும்புமுறிவு போன்ற சிகிச்சைகளுக்கும், கல்லீரல், சிறுநீரகம், இதயம், எலும்பு மஜ்ஜை போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த திட்டத்தின்படி, பயன்பெறலாம் என்கின்றனர். ஆனால், காப்பீடு அட்டையை எடுத்துக் கொண்டு சென்றால், விரட்டியடிக்காத குறையாக வெளியேற்றி விடுகின்றன தனியார் மருத்துவமனைகள்” என்று நம்மிடம் வேதனையை வெளிப்படுத்தினார் அந்த காக்கி நண்பர்.

 

 

அப்படியெனில் இந்த திட்டத்தால் பயன்பெற்றவர்கள் யாருமே இல்லையா? என்ற கேள்வியோடு சில போலீஸ் நண்பர்களிடம் விசாரித்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதிலோ, “காப்பீடு திட்டம் எல்லாம் வேஸ்ட், எனக்கு தெரிஞ்ச நண்பர் எங்க பக்கத்து ஸ்டேஷன்ல வேலை பார்த்தார். பெயர்  வெங்கடேசன், புற்றுநோய் பாதிப்பால் இங்குள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்றார். இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகாதுன்னுட்டாங்க. இப்ப வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பல மாதங்களாக லீவ்ல இருக்கிறதால் இப்ப பாதி சம்பளம் தான் அவருக்கு கிடைக்கும். அதனால் நாங்களே பணம் வசூலித்து அவரது மருத்துவ செலவுக்காக ரூ.3,06,300 எங்க டி.சி அரவிந்தன் (இப்போது பூக்கடை டி.சி. அப்போது தி.நகர் டி.சி)மூலமாக அவருக்கு கொடுத்தோம்” என்றார்.

 

 

“காப்பீடு திட்டத்திற்காக ஒவ்வொரு போலீஸ்காரரிடம் இருந்து மாதம் ரூ.170 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடிவரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது. ஆனால், அதனால் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இப்ப இருக்கிற நிலைமையில லீவு கிடைக்கிறதே பெரியவிசயம். அதனால், ஏதாவது உடம்புக்கு சரியில்லைன்னா கூட ஆஸ்பத்திரிக்கு போக டயம் கிடைக்காது. அப்படியே போனாலும், உங்களுக்கு இந்த வியாதிக்கு இன்ஷ்யூரன்ஸ் கவர் ஆகாதுன்னு சொல்லிடுவான். அதனால சொந்த பணத்தை செலவு பண்ணியே வைத்தியம் பார்த்திக்கிடுவோம்” என்றார் மற்றொரு காக்கி நண்பர்.


இதுதொடர்பாக யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம். “தகுதியுள்ள அனைவருக்கும் காப்பீடு எங்கள் நிறுவனம் மூலம் வழங்குகிறோம்” என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.