Skip to main content

தமிழகத்தில் நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்! சேலத்தில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

stalin

 

தமிழகத்தில் நடந்து வரும் அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இன்று (செப்டம்பர் 18, 2018) நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூறினார்.


தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஊழல் புரையோடிக் கிடக்கும் அதிமுக அரசைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.


திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சேலத்திற்கு முதன்முதலாக வருகை புரிந்தார். நேற்று இரவே சேலம் வந்துவிட்ட அவருக்கு மாவட்ட எல்லையான தலைவாசலில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். 


ஆர்ப்பாட்டத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியது: 

 
தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அரசு ஊழல் அரசாக மாறிவிட்டது. அகில இந்திய அளவில் ஊழல் நிறைந்த அரசாக தமிழக அரசு திகழ்கிறது. குட்கா ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், நெடுஞ்சாலை ஊழல் என கணக்கில் கொள்ள முடியாதது ஏராளம். சேலம் என்றாலே மாம்பழத்திற்கு சிறப்பு வாய்ந்தது. அந்த மாம்பழத்தை துளைக்கும் வண்டு போல எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அகில இந்திய அளவில் கறைபடிந்த அமைச்சரவை தமிழகத்தில்தான் உள்ளது.

 

stalin

 

எடப்பாடி பழனிசாமி மீதான ஊழலை விசாரிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பாலியல் புகார் உள்ளது. அவரை விசாரிக்க வேண்டிய டிஜிபி மீது குட்கா ஊழல் புகார் உள்ளது. இப்படி, ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகளே பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால்தான் நாம் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம்.


சிறந்த ஊழல்வாதி யார் என்று போட்டி போட்டால் அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார். தமிழக அமைச்சர்கள் ஊழல் பணத்தை மத்திய அரசுக்கு கப்பம் கட்டுகின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதற்காக தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். 

 

stalin

 

உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினர்களுக்கு 310 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. விதிகள் மீறப்பட்டதாக எதிர்காலத்தில் தமிழத்திற்கு உலக வங்கியின் நிதி உதவி கிடைக்காமல் போகும் அபாயமும் உள்ளது. தமிழக மக்களின் வரிப்பணம் பினாமிகளுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஊழலின் நாயகனாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.தேர்தல் நேரத்தில் மாதம் 5 லட்சம் ரூபாய் வருமானம் என்று அபிடவிட் தாக்கல் செய்துள்ள முதலமைச்சரின் உறவினர்கள் தற்போது வெளிநாடுகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். ஊழலுக்குத் துணைபோகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து விட்டோம். 


நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கரன்சி எண்ணிய அனைவரும் கம்பி எண்ணுவார்கள். லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி விட்டனர். ஆனால், அதற்கு தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு நியமித்தால் முதலில் சிறைக்குப் போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.