
ஈரோடு டவுன் சப்-டிவிஷனில் கருங்கல்பாளையம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு டவுன், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, மொடக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போலீஸ் நிலையங்களில் தனித்தனியாகத் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த தனிப்பிரிவு போலீசாரின் முக்கிய பணி தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் எந்தவித செய்தி நடந்தாலும் அதை போலீசாருக்கு முன்கூட்டியே தெரிவிப்பதுதான். இந்த தனிப்பிரிவு போலீசார் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடைசியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினார். புகாருக்குள்ளாகும் போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது டவுன் சப்-டிவிஷனில் உள்ள கருங்கல்பாளையம், அரசு மருத்துவமனை, ஈரோடு டவுன், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, மொடக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்து எஸ்.பி. ஜவகர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.