
சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (72). இவருடைய மனைவி பாரதி (68). இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். இந்த தம்பதிக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகன் உள்ளார். ஜெயப்பிரகாஷுக்கு திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (08-01-24) மணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், மணியின் மகன் ஜெயப்பிரகாஷ் தனது தந்தையை உடனடியாக சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இறந்து போன தனது தந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து தனது தாயாரான பாரதியிடம் இது குறித்து கூறியுள்ளார். கணவர் இறந்த செய்தியைக் கேட்ட பாரதி அதிர்ச்சியடைந்தார். இதனிடையே, ஜெயப்பிரகாஷ் தனது தந்தை இறந்த செய்தியை உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், தாய் பாரதி அங்கு இல்லாததால் அவரைத் தேடி வந்துள்ளார். அதன் பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு அறையில் பாரதி தூக்குப் போட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, தாய் பாரதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாரதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேற்காடு காவல்துறையினர், தற்கொலை செய்த பாரதியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. கணவர் இறந்த செய்தியை அறிந்ததும் துக்கம் தாங்காமல் மனைவியும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.