Skip to main content

வழிப்பறி ரவுடிக்கு 8வது முறையாக குண்டாஸ்!

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

two persons arrested in salem under gudas act

 

சேலத்தில் வழிப்பறி ரவுடியை காவல்துறையினர் எட்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அவருடன் மேலும் ஒரு ரவுடி நான்காவது முறையாக இச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 

சேலம் சின்னேரி வயல்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் பாண்டியன் (36). சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே வடக்கு தெருவைச் சேர்ந்த பாஷா மகன் அப்சல் என்கிற கச்சா (28). இவர்கள் இருவரையும் சேலம் மாநகர காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூரமங்கலம் மேற்கு ரயில்வே காலனியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் நகைகளைத் திருடியது, அதே வாரத்தில், தில்லை நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் நகைகளைத் திருடியது ஆகிய சம்பவங்கள் தொடர்பாக பாண்டியன் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவங்கள் நடந்த சில நாள்களில் அதாவது, 21.11.2020ம் தேதி, பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரிடம் பாண்டியன் கத்தி முனையில் 1500 ரூபாய் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாளும் திருவாக்கவுண்டனூர் அருகே ஒருவரிடம் கத்திமுனையில் 2 பவுன் நகைகளைப் பறித்துள்ளார்.

 

இச்சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் பாண்டியனை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

 

அதேபோல், மற்றொரு ரவுடியான அப்சல் என்கிற கச்சா சேலம் மிலிட்டரி சாலையில் கசாப்புக்கடைக்காரரிடம் மிரட்டி மாமூல் கேட்டு தகராறு செய்ததாக அம்மாபேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அவர், பிணையில் வெளியே வந்தார். 

 

அதன்பிறகும் அவர், அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்தது, கத்தி முனையில் பணம் பறித்தது, டீக்கடைக்குள் புகுந்து பணம் கொள்ளை அடித்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டார். இந்த சம்பவங்களின் பேரில் அப்சல் மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதை அடுத்து ரவுடிகள் பாண்டியன், அப்சல் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் ஜன. 12ம் தேதி, குண்டாஸில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டாஸ் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.

 

இவர்களில் பாண்டியன் 8வது முறையாகவும், அப்சல் 4வது முறையாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.