Skip to main content

’வேட்புமனு தமிழில் இல்லை ஆங்கிலத்தில்தான் உள்ளது’-விவசாயிகளை வெறுப்பேற்றிய மயிலாடுதுறை நாடாளுமன்ற அதிகாரிகள்

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததுமே, டெல்டா மாவட்டங்களில் உள்ள தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, ஆகிய மூன்று நாடாளுமன்ற  தொகுதிகளிலும், நிலம் நீர்  பாதுகாப்பு அமைப்பின் சார்பாக 300  வேட்பாளர்களை நிறுத்தப்போகிறோம், தேர்தலை போராட்டக்களமாக மாற்றி ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்போகிறோம் என்று கூறியிருந்தனர். அதனை நமது நக்கீரன் இணைய தளத்திலும் பதிவிட்டிருந்தோம்.

 

m

 

நாடாளுமன்றத்தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கிவரும் நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கு நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை பெறுவதற்கு மயிலாடுதுறை ஆர்,டி,ஓ அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சில விண்ணப்பங்கள் மட்டுமே தமிழில் இருப்பதாகவும், அதிக அளவில் விண்ணப்பங்கள் வேண்டுமானால் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது  என கூறியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வாங்க மறுத்து, " எங்களுக்கு எதிராக சூது செய்கிறீர்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். " என்ற கோஷத்தை எழுப்பினர்.

 

அவர்களிடம் தேர்தல் அலுவலர்கள்,  தமிழில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வேண்டுமானால், நாகை ஆட்சியரிடம் கேளுங்கள்," எனகூறி வெளியேற்றினர்.

 

m

 

இதுகுறித்து நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறுகையில்," மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான அதிகாரியும், வேட்பு மனுக்களும்  நாகப்பட்டினத்தில் இருக்கிறது என்று கூறுவதில் இருந்தே இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்காது என்பது புலப்படுகிறது.  நாகை கலெக்டர் தேர்தல் அதிகாரியாக இருக்கிறார்.  அவர் மயிலாடுதுறை பகுதிக்கு வராமல் நாகையில் இருந்து கொண்டு தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. மயிலாடுதுறை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கியிருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.


  
இந்தநிலையில் அந்த அமைப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ராஜா ஆகிய இருவரும் வேட்புமனுவை பெற்றிருந்தார் அவர்கள் இருவரும் மற்றும் நிலம்நீர் அமைப்பினரும் கழுத்தில் காலி மது பாட்டில்களுடன் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை உதவி தேர்தல் அலுவலர் கண்மணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 

 மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தவர்கள், " மீத்தேன் திட்டத்தை எதிர்த்து வந்த நேரத்தில், ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டது. ஹைட்ரோகார்பன் எடுத்தால் விவசாய நிலம் பாழ்பட்டு பாலைவனம் மாறும், மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.   இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிலமீட்பு இயக்கத்தினர் தற்போது இரண்டு பேர் தாக்கல் செய்துள்ளோம், விரைவில் மற்றவர்கள் தாக்கல் செய்வோம்" என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.