
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல இடங்களில் ரவுடிகள் வெட்டி படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் மதுரை தனக்கன்குளம் பகுதியில் காளீஸ்வரன் என்ற ரவுடி நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரை நேற்று இரவு இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளனர். காளீஸ்வரன் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸை மறித்து அவருடைய ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவத்தால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காளீஸ்வரன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி மதுரை தனக்கன்குளம் திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் உறவினர் மற்றும் ஆதரவாளர் என்று தெரிய வருகிறது.

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன்
திமுக மண்டல செயலாளர் குருசாமிக்கும் முன்னாள் அதிமுக மண்டல தலைவர் ராஜபாண்டியன் உறவினரான ஏ ப்ளஸ் ரவுடியாக வலம் வந்த வெள்ளை காளி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து தெரியவந்தது. இந்த மோதல் காரணமாக மதுரை மாநகரில் பல கொலைகள் நடைபெற்றது தெரியவந்துள்ளது. வெள்ளை காளி தற்போது சிறையில் இருக்கும் நிலையில் வெள்ளை காளியின் ஏவுதலின் பேரில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் மட்டும் கடந்த 20 நாட்களில் ஆறு கொலைகள் நிகழ்ந்துள்ளது. ரவுடி காளீஸ்வரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலையில் ஈடுப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், அதேபோல சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் என்பவர், காரைக்குடியில் மனோஜ் என்கின்ற ரவுடி என நிகழ்ந்த படுகொலைகள் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மதுரையில் நிகழ்ந்த இந்த படுகொலையும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.