!['' Trying to cause chaos will not happen '' Edappadi Palanisamy interview!](http://image.nakkheeran.in/cdn/farfuture/FYapu3j40OAQPDoKuWaXu8GlW7W44gChUAgzp3qNhBI/1622797124/sites/default/files/inline-images/ip1_3.jpg)
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 9 மாவட்டச் செயலாளர்களுடன் தற்போது அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடைபெற்றது. ஜெயக்குமார், தி.நகர் சத்யா, விருகை ரவி, பெஞ்சமின் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், ''மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்கலாம். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். அது நடக்காது. சசிகலா அமமுகவினருடன்தான் பேசிவருகிறார். சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதுதான் கட்சியினரின் கருத்து. எனக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. சென்னையில் புது வீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் ஆலோசனையில் அவர் பங்கேற்கவில்லை. இன்று நல்ல நாள் என்பதால் இந்த ஆலோசனையில் ஈடுபட்டேன்'' என்றார்.