Skip to main content

போக்குவரத்துத்துறை - ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

 

Transport Department - Wage hike agreement signed!

 

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. என 66 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். 

 

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பது இனி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது. 

 

குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூபாய் 2,012, அதிகபட்சம் ரூபாய் 7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. நடத்துநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூபாய் 1,965 ஆகவும், அதிகபட்சம் ரூபாய் 6,640 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

 

பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட நிலையில், ஒப்பந்தம் இறுதி செய்ததை சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.ஐ.டி.யூ.வைச் சேர்ந்த சௌந்தரராஜன், "நான்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு இல்லை. பல்வேறு பிரச்சனைகளில் உடன்பாடு எட்டப்பட்டதால் ஒப்பந்தத்தை ஏற்கவுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்