![Train derailment accident; Tamil Chief Minister advises](http://image.nakkheeran.in/cdn/farfuture/45Az6g5PCPJ8hJspG4csOE3QA3rQ7c7LM-d_M97rrjg/1685721685/sites/default/files/inline-images/NM187.jpg)
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 6782 262 286 என்ற அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்திலிருந்து ஐஏஎஸ் மற்றும் மீட்பு படை அதிகாரிகளை அனுப்பி வைப்பதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என ரயில்வே மற்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.