Skip to main content

நடத்தையில் சந்தேகம்; மனைவிக்கு நேர்ந்த சோகம்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Tragedy of the wife for Doubt in behavior

சென்னை அடுத்த கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவருக்கு சியமளாதேவி (36) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 14 மற்றும் 9 வயது என இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் அந்தப் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மளிகை கடையில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலும், நிதி பற்றாக்குறை காரணத்தினாலும் அந்த கடையை மூடும் நிலைமைக்கு சுரேஷை தள்ளியது. அதனால் அவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நடத்தி வந்த மளிகை கடையை நிரந்தரமாக மூடியுள்ளார். இதனையடுத்து, குடும்ப செலவுகளுக்காக சுரேஷின் மனைவி சியாமளாதேவி, தனது வீட்டின் அருகே உள்ள இ - சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே, சியாமளாதேவியின் நடத்தையில் சுரேஷ் சந்தேகம் அடைந்துள்ளார். இந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷ், தனது மனைவி சியாமளா தேவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல், சுரேஷுக்கும் அவருக்கு மனைவி சியாமளாதேவிக்கும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (08-02-24) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக முற்றியது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ் தனது மனைவி சியாமளாதேவியை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த சியாமளாதேவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பிறகு சுரேஷ், சியாமளாதேவியின் உடலை வீட்டிலேயே விட்டுவிட்டு வீட்டை வெளியே பூட்டி தப்பித்து ஓடி உள்ளார். இதனையடுத்து, இந்த வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது இரு மகன்களும் தனது தாய் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்புறத்தை வேகமாகத் தட்டி உள்ளனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது சியாமளாதேவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த சியாமளா தேவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவான சுரேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதையடுத்து, சுரேஷின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாகயிருந்த சுரேஷை, போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்