
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து அவர் வகித்த வந்த துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் குறித்தும் சைவ - வைணவ சமயம் குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிய பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து, அவர் வகித்து வந்த வனத்துறை மற்றும் காதி துறையை, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் பரிந்துரை அடிப்படையில் அமைச்சரவை மாற்றங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய அமைச்சர் பதவியேற்பு விழா , நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வரும் நாளை (28-04-25) தெரிவிக்க வேண்டும் என்று விசாரணையை நாளை ஒத்திவைத்த நேரத்தில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.