Skip to main content

திருவண்ணாமலையில் நிர்வாண யாகம் நடத்திய சாமியார்: விரட்டியடித்த நீதிபதி

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
Tiruvannamalai


திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் கடந்த ஜூன் 28ந் தேதி இரவு வலம் வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்படி வந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது ஒரு நிர்வாண யாகம்.
 

கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை என்கிற பகுதியில் சந்நியாசிகள் நிறைந்து தங்கியுள்ளனர். அந்த திருநேர் அண்ணாமலை பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த கோயிலுக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு சாமியார் நிர்வாணமாக அமர்ந்து யாகம் வளர்த்துக்கொண்டு இருந்தார்.

 

 

 

10 பேர் கொண்ட ஒரு குழு சத்தமாக மந்திரங்கள் உச்சரித்துக்கொண்டு இருந்தது. இந்த மந்திர சத்தமும், யாக புகையும் கிரிவலம் வந்தவர்களை அந்தப்பக்கம் இழுத்தது, பணக்கார தன்மையுடைய சிலர் அந்த யாகத்தின் முன் அமர்ந்து வணங்கிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்து கிரிவலம் வந்தவர்களும் நின்று வணங்கினர். வணங்கியவர்கள், யாகத்தின் முன் அமர்ந்திருந்தவரை உற்றுநோக்கிய பின்பே தெரிந்தது அந்த சாமியார் நிர்வாணமாக இருந்தது. அது பக்தர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. பெரும்பாலான பெண் பக்தர்கள் அந்த பகுதியை வேகமாக கடந்து சென்றனர்.
 

கிரிவலப்பாதையில் வனத்துறைக்கு சொந்தமான, கோயில் நிர்வாகத்தில் உள்ள இடத்தில் ஒருவர் நிர்வாணமாக அமர்ந்து யாகம் நடத்திக்கொண்டு இருக்கிறாரே யார் இவர் என அங்கிருந்த சந்நியாசிகள் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டனர்.
 

நாம் யாகம் நடத்திய குழுவில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது, தெலுங்கு கலந்த தமிழில் பேசினார். ஆந்திராவில் பொக்குல கொண்ட கைலாச ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் பெயர் அவத்தூதா நித்யா அன்கி ஹோத்ரி அட்ட யோகிஸ்வர மௌனி திகம்பரி ஷட்டகோபி என்பது அவர் பெயர் என்றும், உலக நன்மைக்காக இந்த யாகத்தை நடத்துவதாகவும், ஜீன் 25ந் தேதி காலை இந்த யாகத்தை தொடங்கியதாகவும், காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் நடைபெறும் இந்த யாகம் வரும் ஆகஸ்ட் 25ந்தேதி வரை 61 நாட்கள் நடைபெறவுள்ளது எனத்தெரிவித்தார்.

 

 

 

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் யாகம் நடத்துவது பற்றி காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, கிரிவலப்பாதையில் நிர்வாண பூஜை நடத்தறாங்களா, என்னன்னு தெரியல. எங்ககிட்ட யாரும் அனுமதி வாங்கல என்றார்கள் சாதாரணமாக.
 

போலீஸ்க்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் வெளிப்படையாக நடப்பதே என்னவென தெரியவில்லை. அப்படியிருக்க இன்னும் என்னன்ன நடக்கிறதோ அந்த கிரிவலப்பாதையில்? என நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
 

அதனைத் தொடர்ந்து திருவாண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். யாகம் நடத்துவதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும் என சாமியார் தரப்பு எதிர் கேள்வி கேட்டதால் என்ன செய்வது என்று போலீசார் முழித்தனர். புகார்கள் யாரும் தராததால் அடுத்து என்ன செய்வது என எஸ்.பி. அலுவலத்திற்கு தகவல் தந்துவிட்டு அமைதியாகிவிட்டனர்.‘

 

 

 

இந்த நிலையில் நமது இணையதள செய்தியை பார்த்துவிட்டு தினசரி பத்திரிகைகள் இன்று செய்திகள் வெளியிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி இன்று மாலை 4 மணி அளவில் கிரிவலப் பாதைக்கு சென்றவர், சம்மந்தப்பட்ட சாமியாரிடம் அனுமதி பெறாமல் யாகம் நடத்துவது சட்டப்படி குற்றம். இது வனத்துறைக்கு சொந்தமான இடம். இந்த அமைதியான இடத்தில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்வத சரியல்ல. நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நிர்வாண யாகம் நடத்திய சாமியார், யாகத்தை நிறுத்திவிட்டு உடனடியாக இங்கிருந்து புறப்பட்டு செல்லும் வேலையில் ஈடுபட்டார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை; 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
chennai corporation office near premkumar incident 6 people surrendered in court

சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சேட்டு என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. சேட்டு கொலை வழக்கில் பிரேம்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், சேட்டு கொலை வழக்குக்காக பிரேம்குமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு நேற்று (19-12-23) வந்து ஆஜரானார். அதன் பின்னர், அங்கிருந்த தனது உறவினர்களான நரேஷ், வசந்த் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரேம்குமாரை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாக்கத்தியால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நரேஷ் மற்றும் வசந்துக்கும் வெட்டு விழுந்தது. அதில், பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேட்டு கொலைக்கு பழிக்கு பழி வாங்க பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரை, சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கர், சாந்தகுமார், நாராயணன், சரவணன், குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 6 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.