Skip to main content

சத்துணவுப் பெண் ஊழியரின் கொலை வழக்கு; மூவருக்கு 'ஆயுள்'!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

Three person jailed for life in case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம், வயது 58. இவர் மூரார்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனன் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சனை இருந்துவந்துள்ளது. இதன் காரணமாக தனபாக்கியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நடத்தி வந்துள்ளார்.

 

அதில், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது. இதனால், தனபாக்கியம் குடும்பத்தினர் மீது அர்ஜுனன் குடும்பத்திற்கும், மேலும் முன்விரோதம் அதிகரித்தது. இதனால் அர்ஜுனன் குடும்பத்தினர் தனபாக்கியத்தைக் கொலை செய்யத் திட்டம் வகுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தனபாக்கியம் தனது சத்துணவுப் பணியை முடித்துக் கொண்டு மூரார்பாளையத்தில் இருந்து தனது ஊருக்கு நடந்துவந்து கொண்டிருந்தார்.

 

அப்போது அர்ஜுனன் அவரது பிள்ளைகள் முத்துகிருஷ்ணன், லட்சுமி குமார் ஆகிய மூவரும் சேர்ந்து தனபாக்கியத்தை வழிமறித்துச் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சாந்தி அவர்கள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினார்.

 

அந்த தீர்ப்பில், தனபாக்கியத்தை கொலைசெய்தது சம்பந்தமாக அர்ஜுனன், முத்துகிருஷ்ணன் மற்றும் லட்சுமி குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதம் கூடுதல் சிறைத் தண்டனையும் சேர்த்து விதிக்க வேண்டும் என்று தீர்ப்பினை வழங்கி உள்ளார். சிறைத் தண்டனை கிடைக்கப் பெற்ற அப்பா பிள்ளைகள் மூன்று பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டுசென்று அடைத்தனர். இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில்குமார் ஆஜராகி சிறப்பாக வாதாடியுள்ளார். சத்துணவு ஊழியர் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்