Skip to main content

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி! வாகன ஓட்டிகளின் துணிச்சல்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
theft in chennai trichy national highway police arrested four

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக உளுந்தூர்பேட்டை இருந்துவருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி, கேரள மாநிலம் பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை டிரைவர் நூறு முகமது என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவருடன் ராஜேஷ் உட்பட மூன்று பேர் லாரியில் பயணம் செய்துள்ளனர். 

இந்த லாரி, உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள செம்பியன் மாதேவி வனக்காட்டுப் பகுதியை நேற்று இரவு கடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் ஒரு காருடன் நின்று கொண்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பல், லாரியை நிறுத்தி உதவி கேட்பது போல் நிறுத்த முயன்றுள்ளது. இதனால், லாரி டிரைவர் நூறு முகமதும் வண்டியை நிறுத்தியுள்ளார். 

வண்டியை நிறுத்தியதும், அந்தக் கும்பல் லாரியில் இருந்த ராஜேஷ் என்பவரின் செல்போனை பறித்துள்ளது. அதன்பிறகே அந்தக் கும்பல் வழிபறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக லாரி டிரைவர் உட்பட வண்டியில் இருந்த நான்கு பேரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் வண்டியை நிறுத்திவிட்டு வந்து பார்த்துள்ளனர். அப்போது வழிபறி கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து அவர்களை, வாகன ஓட்டிகள் மடக்கி பிடித்துள்ளனர். இதில், நான்கு பேர் சிக்கிக் கொள்ள மற்ற மூவரும் காரில் அங்கிருந்து தப்பிவிட்டனர். 

பிறகு பிடிபட்ட நான்கு பேரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நான்கு பேரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களா? அல்லது பழைய குற்றவாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளிகளுக்கிடையே மோதல்; முட்டிக்கொள்ளும் மாணவர்கள் - கதிகலங்கும் கோட்டைமேடு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
School students clash in Coimbatore

கோவை மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள வின்சென்ட் சாலைப் பகுதியில்.. சிட்டி பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, கோட்டைமேடு பள்ளி என மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் கோவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, இந்த மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குள் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.

காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும் மாலையில் வீடு திரும்பும் சமயத்திலும் மாணவர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கின்றனர். அதில், மாநகராட்சி பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்ட சிட்டி பள்ளி மாணவர் தன் ஊருக்குள் இருக்கும் நண்பர்களை அழைத்து வந்து.. தன்னை தாக்கியவர்களை திருப்பி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வின்சென்ட் சாலையில் உள்ள சந்துப் பகுதியில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த மாணவர்களைத் தடுக்க முயற்சித்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில், அங்கிருந்த நபர் ஒருவர் பள்ளி சீருடையில் சண்டை போட்டுக்கொண்டிருந்த மாணவர்களை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கியுள்ளார். இதைப் பார்த்ததும்.. அவர் தங்களைப் போலீசில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து கலைந்துச் சென்றனர். பின்னர், இது குறித்து உக்கடம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஸ்பாட்டுக்கு வந்த போலீசார்.. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது, இது சம்மந்தமான வீடியோ சோசியல் மீடியா உள்ளிட்ட தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், இங்குப் படிக்கும் ஒரு சில மாணவ - மாணவிகள் சமீப காலமாக பல்வேறு தவறுகளை செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது போதையில் இருந்த பள்ளி மாணவி ஒருவர் நடுரோட்டில் படுத்து தூங்கியதும் பள்ளி சீருடையில் மது வாங்க சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல், பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் காதல் விவகாரம், போதைப் பழக்கம், சாதி சண்டை போன்ற பிரச்சனைகளால் பேருந்து நிலையம், பள்ளிக்கு அருகில் உள்ள பேக்கரி கடைகள் போன்ற பகுதிகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

இது சம்மந்தமான விஷயங்களில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை அரசு மற்றும் காவல் துறையினரும் கருத்தில் கொண்டு உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்கால சமுதாயத்தைப் பாதுகாக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவை நிறுத்திகொண்ட பெண்; பெட்ரோல் ஊற்றி எரித்த 60 வயது முதியவர்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
60-year-old man who burned his woman with petrol

சென்னை வியாசர்பாடிக்கு அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 50 வயதாகிறது. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஆறுமுகம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனிடையே, மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவந்த செல்வி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையில், செல்விக்கு புளியந்தோப்பு கனகராயத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சுப்ரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து  தனிமையில் இருந்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் அதிகரிக்கவே சுப்ரமணியும் செல்வியும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அதே நேரம், சுப்பிரமணிக்கு ஏற்கனவே திருமணமாகி தனியாக குடும்பம் உள்ளது. இருந்தபோதும் சுப்பிரமணி செல்வியுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். 

இத்தகைய சூழலில், செல்வியின் பிள்ளைகள் பெரியவர்களாக வளர்த்துவிட்ட நிலையில் தாயின் திருமணத்தை மீறிய உறவு அவர்களுக்குக் கோபத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருகட்டத்தில், இதனைப் புரிந்துகொண்ட செல்வி சுப்பிரமணியுடன் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியுள்ளார். அதன்பிறகு, இனிமேல் வரவேண்டாம் எனக் கூறிய செல்வி சுப்பிரமணியுடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார். ஆனால், சுப்பிரமணி செல்வியுடன் பேசத் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க செல்வி தனது மகளை கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக செல்வி ஓட்டேரி பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 26 ஆம் தேதி செல்வி தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த தகவலை அறிந்த சுப்பிரமணி மதியம் 2 மணியளவில் செல்வியின் மகள் வீட்டிற்கு வந்து செல்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவரும் மீண்டும் கணவன், மனைவி போல சேர்ந்து வாழலாம் என சுப்பிரமணி கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த செல்வி, "இதெல்லாம் சரியா வராது. பசங்கெல்லாம் தோளுக்கு மேல வளந்துட்டாங்க. நீங்க உங்க வழிய பார்த்துக்கோங்க" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும் செல்வி அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். இதில் சுப்பிரமணி மீது பெட்ரோல் பட்டு, அவர் மீதும் தீ பற்றியதால் இருவரும் தீயில் எரிந்துள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த செல்வியின் மருமகன் தனது மாமியார் செல்வியின் தீயை அணைக்க முற்பட்டார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர், இவர்களுடைய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து, 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு செல்வி 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பிரமணி மற்றும் செல்வியின் மருமகன் ஆகிய இருவரும் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகாத உறவு விவகாரத்தில் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.