Skip to main content

அத்தனைபேரும் 'பேய்' எம்எல்ஏக்கள்... அமைச்சரின் பிரச்சார காமெடி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்தபோது 

“சின்னப் பிள்ளைகளுக்கு பஞ்சு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது போல் தமிழக வாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றது. எடப்பாடியார் உண்மையைக் கூறி ஓட்டு கேட்டார். நடப்பதைச் சொன்னார், பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் டெல்லியில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? டெல்லிக்குப்போய் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

 All these 'ghost' MLAs ... Minister's propaganda comedy!


நாங்கள் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்று திமுகவினர் கூறுகின்றனர். 13 என்பது..  அது ஒரு பேய் நம்பர். வெளிநாட்டில் 13 என்ற நம்பரை யாரும் வைக்க மாட்டார்கள். காரணம் அது ஒரு பேய் நம்பர். உங்களுக்குக் கிடைத்துள்ள எம்எல்ஏக்கள் பேய் எம்எல்ஏக்கள். எங்களுக்கு கிடைத்திருக்கின்ற எம்எல்ஏக்கள் நவரத்தினங்கள். இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஒன்றுமே ஆகவில்லை. ஸ்டாலினுக்கு முதல்வராகும் ஜாதகப்பொருத்தம் கிடையாது. 8 பொருத்தமும் எடப்பாடியாருக்கு உண்டு. அடுத்த தேர்தலிலும் எடப்பாடியார்தான் முதல்வர். சொந்த அண்ணனையே காட்டிக் கொடுத்து, தூக்கி எறிந்து திமுகவை ஸ்டாலின் கைப்பற்றினார். 

வேலூர் தொகுதியில் திமுகவில் திறமையானவர்கள் கிடையாதா. ஒன்றிய செயலாளர் கிடையாதா, துரைமுருகன் வாரிசு என்ற காரணத்தினால் திமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதா என்று திமுகவினரே கேட்கின்றனர். திமுகவில் உழைத்த சாதாரண தொண்டனுக்கு வேலூர் தொகுதியில் சீட் வழங்கப்படவில்லை. திமுகவில் முழுவதும் வாரிசு அரசியல் தான் தலைதூக்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக யாரையும் ஸ்டாலின் கட்டுப்படுத்த முடியாது. கருணாநிதி அவரது மகன் ஸ்டாலினை முத்தமிட்டார். அந்தக் காட்சி மிகப்பெரிய விதத்தில் பிரசுரிக்கப்பட்டது. ஸ்டாலின் அவரது மகனை நெற்றியில் முத்தமிட்டு வாரிசு அரசியலை உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் அவரது மகனை முத்தமிட்டு வாரிசு அரசியலாக நியமிப்பார். திமுக என்ற கட்சியை,  4-வது  தலைமுறையாக ஒரு குடும்பம் தன்பிடியில்  வைத்துள்ளது.  திமுகவிற்கு வளர்ச்சி என்பதே இனி இருக்காது. அவர்கள் செய்வது அனைத்தும் பித்தலாட்டம், பேயாட்டம்,  நரித்தனம், கோழைத்தனம். 

 All these 'ghost' MLAs ... Minister's propaganda comedy!


30 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தவர் துரைமுருகன்.  இந்த பார்லிமென்ட் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. இப்பொழுது நடைபெற்ற சாலைப் பணிகள், குடிநீர் வசதிகள், எல்லாமே எடப்பாடியார் அரசால் செய்யப்பட்டது. தங்கம் வெட்டி எடுக்கும் நாட்டில் கூட தங்கம் இலவசமாகக் கொடுப்பது கிடையாது.  ஆனால் 8 கிராம் தங்கத்தை இலவசமாகக் கொடுத்தவர் ஜெயலலிதா. கருணாநிதிக்கு நாலுமுளம் வேட்டியைக் கொடுத்து அரசியல் வாழ்க்கை கொடுத்தவர் எம்ஜிஆர்.  திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடிகள் குவிந்தது. கருணாநிதி என்ன வயலுக்கு போனாரா, தண்ணீர் பாய்ச்சினாரா, களை எடுத்தாரா எதுவுமே கிடையாது. எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்துக் குவித்த பணம். அவர்களது குடும்ப நிலைமையைக் கருத்தில் கொண்டுதான் ஆட்சியையும் கட்சியையும் நடத்தி வருகின்றனர். 

அதிமுகவை நாங்கள் நினைத்தால் அரை விநாடியில் கலைத்து விடுவோம் என்று ஸ்டாலின் கூறுகின்றார். ஆட்சியைக் கலைப்பதற்கு.. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமி என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறாரா?.  . எடப்பாடியார் நிழலை யாரும் நெருங்க நினைத்தால்கூட  அதிமுக தொண்டர்கள் தற்கொலைப் படையாக மாறுவார்கள். இனிமேல் சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் டான்ஸ் ஆடிப் பார்க்கட்டும்.  உங்கள் தலையில் ஏறி நாங்கள் ஆடுவோம்.  நாங்களெல்லாம் சுவர் ஏறி படம் பார்த்த கூட்டம். நாங்கள் எல்லாம் பஸ்ஸில் உட்கார்ந்து வந்த கூட்டம் கிடையாது. படிக்கட்டில் பயணம் செய்து வந்த கூட்டம். எங்க கிட்டயே சேட்டை செய்கிறீர்கள். நாங்கள் எல்லாம் பொறுமையாக இருக்கின்றோம். திமுகவினர் நாங்கள்தான் ரவுடி நாங்கள் தான் ரவுடி என்று கூறி வருகின்றனர். எங்களுக்கும் எல்லா வித்தைகளும் தெரியும். எங்களை திமுகவினர் மிரட்டி பார்க்க நினைத்தால் திமுகவினரின் அரசியலை நாங்கள் முடித்து வைப்போம்.

நாங்களெல்லாம் கில்லி என்று ஸ்டாலின் கூறி வருகிறார். நீங்கள் கில்லி ஒன்றும் கிடையாது வெறும் சுள்ளிதான். என்றுமே நாங்கள்தான் கில்லி. உங்களது வேலையை எங்களிடம் காட்டாதீர்கள். உங்களது நரித்தனமான வேலை எங்களிடம் பலிக்காது.  எடப்பாடி கண்ணசைத்தால் திமுக கட்சிக்கு சாவு மணி அடித்து விடுவோம். எடப்பாடியார் நினைத்தால்தான்,  திமுக கட்சிக்கு வாழ்வு உண்டு. நயன்தாராவை கட்டிப்பிடித்ததால் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி பதவி வழங்கப்பட்டதா. அப்படி என்றால் நயன்தாராவை கட்டிப்பிடித்தால் பொறுப்பு கொடுப்பீர்களா. அப்படி என்றால் நடிகர் பிரபுவுக்கும் பொறுப்பு கொடுக்க வேண்டும். திமுகவில் முழுக்க முழுக்க குடும்ப அரசியல் தழைத்தோங்கி உள்ளது. பிள்ளைக்காக உழைப்பவன் மனிதன் கிடையாது. நாட்டுக்காக உழைப்பவன் தலைவன். திமுக குடும்பம்,  பிள்ளைகளுக்காக அரசியல் நடத்துகிறது. எடப்பாடியார் நாட்டு மக்களுக்காக அரசியல் நடத்துகிறார். ஆட்சி நடத்துகிறார். எடப்பாடியார் நாட்டிற்காக உழைக்கிறார். காட்பாடியார் அவரது மகனுக்காக உழைக்கின்றார். தனது மகனை வேட்பாளராக நிறுத்தி அழுகின்றார்.  ஒருமுறை ஓட்டு போடுங்கள் என்று எத்தனை முறைதான் துரைமுருகன் அழுது ஓட்டு கேட்பார்.” என்றெல்லாம் சீரியஸாகவும் காமெடியாகவும் பேசி மக்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்.   

அமைச்சராக இருந்தும் என்ன பேச்சு பேசுகிறார்? அறிந்துதான் பேசுகிறாரா? கே.டி.ராஜேந்திரபாலாஜியின் டிசைனே இதுதானா?

 

சார்ந்த செய்திகள்