Skip to main content

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Premalatha Vijayakanth meeting with Governor R.N. Ravi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியியைச் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர். “ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள்.  எனவே அந்த மதுபான ஆலைகளை மூட வேண்டும். நாங்கள் கூறிய கருத்துகளை ஆளுநர் மிகவும் கவனமுடன் கேட்டறிந்தார். போதைப்பொருள் பழக்கம் குறித்து அளுநர் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவரிடம் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு பக்கம் குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மற்றொருபுரம் மக்கள் உயிரிழக்கிறார்கள். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது” எனத் தெரிவித்தார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Chief minister should resign EPS Emphasis

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது ‘இனி இதுபோல் நடக்காது’ என்று முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ஊழல் துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு; ஆளுநரின் செயலால் மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Corrupt Vice-Chancellor extends tenure; A renewed opposition to the Governor by action

பல்வேறு ஊழல் மற்றும் சாதிய ரீதியிலான செயல்பாடுகளில் சிக்கி, புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு மேலும் ஒரு வருடம் தமிழக ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது. அரசினுடைய அனுமதி இல்லாமல் முன்னாள் பதிவாளர் தங்கவேலுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களை தொடங்கிய புகாரின் அடிப்படையில் ஜெகநாதன் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதோடு மட்டுமல்லாது உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளில் ஜெகநாதன் ஈடுபட்டதாக மீது ஆசிரியர் சங்கம் மற்றும் பணியாளர்கள் 500 பக்கங்கள் கொண்ட புகார் கடிதத்தை ஆளுநருக்கு எழுதியிருந்தனர். 

 

இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் சாதிய ரீதியாக செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து துணைவேந்தர் ஜெகநாதன் மீதான புகார்கள் குறித்து உயர்கல்வித்துறை அரசு செயலாளர் பழனிசாமி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜெகநாதன் ஓய்வுபெற இருந்த நிலையில் மேலும் ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.