Skip to main content

பிணையில் வெளியேவந்து.. தாய், மகளை கொலை செய்த திருடன்..!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Theft case police arrest recover two gram gold

 

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி (48). இவர்களின் மூத்த மகள் ஜீவஜோதி, திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். விஜயலட்சுமி, தன் இரண்டாவது மகள் மாதவி என்கிற சந்தியாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்குச் சொந்தமான நிலம் புதுச்சேரி அருகே கடலூர் மாவட்டம், சிங்கிரிகுடிக்கு உட்பட்ட இடையார்பாளையம் பகுதியில் உள்ளது. 

 

கடந்த 1ஆம் தேதி விஜயலட்சுமியும் சந்தியாவும் அவர்களது விவசாய நிலத்திற்கு அருகே படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரின் சடலத்தைப் பார்த்து, ரெட்டிச்சாவடி போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பார்வையிட்டதுடன், ஏ.டி.எஸ்.பி பாண்டியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து, இந்த இரட்டைக் கொலை சம்பந்தமாக நேற்று (03.03.2021) புதுச்சேரி மாநிலம், நயினார் மண்டபம் பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி இருசப்பன் (49) என்பவரை டெல்டா போலீசார் கைது செய்து, பின்னர் ரெட்டிச்சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், "விஜயலட்சுமி நிலத்திற்கு அருகில் தென்னந்தோப்பில் இளநீர் குத்தகைக்கு எடுத்துள்ளேன். இளநீர் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லை. அதனால் நகை திருட்டில் ஈடுபட முடிவு செய்தேன். இந்த சூழ்நிலையில், நிலத்தைப் பார்வையிட விஜயலட்சுமியும், அவரது மகளும் அடிக்கடி வருவார்கள். அவர்கள் நகை அணிந்து இருந்ததால் அபகரிக்க முடிவு செய்து, அதன்படி விஜயலட்சுமி, அவரது மகள் சந்தியா இருவருடனும் பழகி வந்தேன். சம்பவத்தன்று விஜயலட்சுமி நிலத்திற்கு வந்தபோது, அவரது கழுத்தில் இருந்த நகையைப் பறித்தபோது அவர் சத்தம் போட்டதால், கத்தியால் வெட்டிக் கொலை செய்தேன். தொடர்ந்து அங்கு வந்த சந்தியாவையும் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

 

அதையடுத்து இருசப்பனை கைது செய்த போலீசார், கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இருசப்பன் ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, நகை திருடிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூலம் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த இருசப்பன், இளநீர் வியாபாரம் செய்து வந்ததுடன், நகை திருட்டிலும் ஈடுபட்டுள்ளார்.

 

போலீசாரின் பிடியில் இருசப்பன் சிக்கியதையடுத்து, அவரிடமிருந்து கொலை செய்வதற்குப் பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட தாய், மகளின் நகைகள் குறித்து விசாரித்தபோது, ஆற்றங்கரையோரம் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று நகையைக் கைப்பற்றி சோதனை செய்ததில் 2 கிராம் மட்டுமே தங்கநகை என்பதும் மற்ற நகைகள் கவரிங் என்பதும் தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.