நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்தார்.
இதையடுத்து மாவட்டத்தின் முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று (25.11.2019) தென்காசியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காலை 8 மணி முதலே மக்கள் அங்கு குவிய தொடங்கினர். இதற்காக 50- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மனு கொடுக்க வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கலெக்டர் அலுவலக அதிகாரிகளும், காவல்துறையினரும் திணறிப் போயினர்.
கலெக்டர் அரங்கத்தில் நுழைந்ததும் அங்கு காத்திருந்த மாற்று திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மனு வாங்கும் இடத்தில் அமர்ந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். நேரம் ஆக ஆக ஏராளமானோர் வரிசையாக வந்து மனு கொடுக்க ஆரம்பித்தனர் இதனால் கலெக்டரும் அவருடன் இருந்த அதிகாரிகளும் திணறிப் போயினர். பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

பொதுமக்களுடன் இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் திரண்டு வந்து தங்கள் கோரிக்கை குறித்து மனு அளித்தனர். தென்காசி மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் பொதுமக்களுக்கு ஏற்றதாக இல்லை. எனவே மாற்று இடம் அமைக்க வேறு இடத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.