
கடந்த மே 29-ஆம் தேதி ‘டீ குடிப்பதற்கு ரூ.5 லட்சமாம்! போலீஸ் உதவி கமிஷனர் அலப்பறை!’ என்னும் தலைபில் நக்கீரன் இணையத்தில், அன்றைய தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகு குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
ரவுடி ராக்கெட் ராஜா வழக்கில், ஏ.சி. முத்தழகு ரூ.5 லட்சம் கேட்ட ஆடியோ அப்போது வைரலானது. அந்த ஆடியோவில் ஒரு இடத்தில், “எனக்கு ரூ.5 லட்சமா? எதுக்கு டீ குடிக்கவா?” என்று கிண்டலாகக் கேட்பார் முத்தழகு, “அதைக் கொண்டுபோய் இன்ஸ்பெக்டர் விஜயகுமார்கிட்ட கொடுடா லூஸுப் பயலே” என்பார். இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 லட்சம், ஏ.சி.யான எனக்கு ரூ.5 லட்சமா என்ற எரிச்சலில்தான் இப்படி பேசியிருந்தார்.
ஆடியோ விவகாரம் லீக் ஆனதால், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முத்தழகை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு டம்மி போஸ்டிங்கில் போட்டிருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன், ஆவடி பட்டாலியன் டி.எஸ்.பி. ஆனார்.
அப்போது, வாட்ஸப்பில் உள்ள மிரட்டல் உரையாடல் தன்னுடையதே அல்ல என்று மறுத்திருந்தார் முத்தழகு. ஆனால், குரல் மாதிரி சோதனையில், அவர் பேசியது இப்போது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம், அண்ணா நகரில் உள்ள அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
‘உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்!’ என்ற பழமொழி, ஒருபோதும் பொய்த்ததில்லை.