![tamilnadu cm palanisamy appointed 2570 nurses](http://image.nakkheeran.in/cdn/farfuture/2r3IS53DHkIDmSONV8jrwVMSFwAVHJMgGhq8d61xyjc/1588930102/sites/default/files/inline-images/cm%20palanisamy.jpg)
கரோனாவைத் தடுக்க மேலும் 2,570 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1,508 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள்.
![tamilnadu cm palanisamy appointed 2570 nurses](http://image.nakkheeran.in/cdn/farfuture/vsUdnTByn74-SvQ8DFr4jZni83y7Zw20s_CebQNIarA/1588930113/sites/default/files/inline-images/cm%20345.jpg)
இதனைத் தொடர்ந்து ஆறு மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2,570 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று தினங்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் கரோனா தடுப்புப் பணிகள் மேலும் வலுவடையும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.