Skip to main content

நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
rs

 

காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு தமிழக அரசு தான் காரணம். அதனால், நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இரு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் ஏற்பட்ட வறட்சியால்  பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாத இராமமூர்த்தி என்ற விவசாயி தற்கொலை செய்து  கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இராமமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நாகை மாவட்டம் கீழையூரை அடுத்த தலையாமழை கிராமத்தைச் சேர்ந்த இராமமூர்த்தி என்ற உழவர் அப்பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால், கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் அவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. கடன் வாங்கி குறுவை நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் பயிர்கள் கருகியதால் வேதனையடைந்த  இராமமூர்த்தி, வாங்கிய கடனை அடைக்க முடியாதே என்ற அதிர்ச்சியில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆதமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற விவசாயியும் பயிர்கள் கருகியதால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதைத்  தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரே மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் இடைவெளியில், இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து செல்ல முடியாது. காவிரி கடைமடை பாசன மாவட்டங்களில் இன்னும்  ஆயிரக்கணக்கான  ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கருகியதால் இரு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் ஏராளமான உழவர்கள் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். கடைமடை பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லாத பினாமி அரசு தான் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது.

 

அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் நடப்பாண்டில் மேட்டூர் அணை மொத்தம் நான்கு முறை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் 170 டி.எம்.சி. நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக வங்கக் கடலில் கலந்தது. ஆனாலும், மேட்டூர் அணை திறக்கப்பட்டு இன்றுடன் 68 நாட்களான நிலையில் இதுவரை கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி, உடனடியாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை நான் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் உண்மையான அக்கறையுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

காவிரி ஆற்றின் பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படாததும், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில்  விதிகளை மீறி 30 முதல் 50 அடி ஆழத்திற்கு மணலை வெட்டி எடுத்ததும் தான் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததற்கு காரணம் ஆகும். பாசனக் கால்வாய்களை தூர்வாரும்படி பல முறை வலியுறுத்தியும் பயனில்லை. கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்ய காவிரி பாசன மாவட்டங்களுக்கு இ.ஆ.ப. அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அதனால் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் குறைந்த பின்னர் மணல் கொள்ளை மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்தே  தமிழக ஆட்சியாளர்கள் யார் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததற்கு தமிழக அரசு தான் காரணம். அதனால், நாகை மாவட்டத்தில் இரு விவசாயிகளின் தற்கொலைக்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இரு விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாருவதுடன், காவிரியில் மணல் அள்ளவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போகுமிடமெல்லாம் ஆளுநருக்கு கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
A black flag for the governor wherever he goes; Police build up

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

நாகை மாவட்டத்தில் வெண்மணி, வேளாங்கண்ணி, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலையிலேயே கீழ்வெண்மணி நினைவிடப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநர் கலந்து கொள்ள இருக்கக்கூடிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.