Skip to main content

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Tamil Nadu cabinet approves online gambling ban law!

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (26/09/2022) காலை 09.30 மணியளவில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் கடந்த 10/06/2022 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தினைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27/06/2022 அன்று தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் சமர்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. 

 

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ளத் தாக்கத்தைப் பற்றி பள்ளிக்கல்வித்துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த 29/08/2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

 

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கிணங்க அவசரச் சட்டம், தயாரிக்கப்பட்டு, இன்று (26/09/2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

 

இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்