Skip to main content

ஸ்டெர்லைட் விரிவாக்க விவகாரம்: பந்தாடப்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி! (EXCLUSIVE)

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
sterlite


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையுலகத்தை சேர்ந்த ரஜினிகாந்த், கமல் உட்பட பலரும் தொடர்ந்து அலையை மூடக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
 

LETTER


இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சி.இ.ஓ ராம்நாத் மற்றும் இணை துணை செயலாளர் சுமதி ஆகியோர் பங்கேற்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவித்ததை போல பத்திரிகையாளர் சந்திப்புக்கு பதிலாக அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து அதிகாரியிடம் விசாரித்தோம் "தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சிப்கார்ட் இரண்டாவது அலகில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்க பணிக்கு 324 ஏக்கரை சிப்காட் நிர்வாகம் ஒதுக்கி இருக்கிறது. இதில் 654 ஹெக்டர் நில பரப்பில் தொடங்கப்பட்டு இருக்கும் ஸ்டெர்லைட் விரிவாக்க பணிக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்டு இருப்பது தெரிய வரவே தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக சிப்காட் தொழில் பூங்காவின் திட்ட அலுவலருக்கு மீறப்பட்டுள்ள சட்டவிதிகள் குறித்து கடுமையாக கடிதம் எழுதி இருந்தார்.
 

கண்ணன்
    அதிகாரி கண்ணன்

அந்த கடிதத்தில் 1988 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட 1981 ஆண்டு காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தில் 21ஆம் பிரிவின் படி சிப்காட் தொழில் பூங்கா கட்டடம் 2 தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. 21 மற்றும் 37 ஆகிய பிரிவின் படி இது தண்டனை கூடிய குற்றமாகும். மேலும் 31 (அ) பிரிவின் படி தண்டிக்க படத்தக்க குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் ஏன் உங்கள் நிறுவனம் மீது குற்றவியல் வழக்கு தொடரக்கூடாது? மேலும் 33 (அ) பிரிவில் நிறுவனத்தை மூடுவதற்கு, மின்சாரம் மற்றும் நீர் வழங்குதலை நிறுத்த ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் அந்த கடிதத்தில் கேட்டிருந்தார்.

இந்த கடிதம் ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதன் பின்னரே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யபட்டு இருக்கிறது. இந்த கடிதத்தை அனுப்பிய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டின் மாவட்ட அதிகாரி கண்ணனை வேறு இடத்திற்கு மாற்ற பல வேலைகள் நடந்து வருகிறது. கண்ணனை பணியிலிருந்து மாற்ற வேலை செய்வது யார் என்று தகவல் அதிர்ச்சியடைய வைத்தது.
 

murugan
                                                     அமைச்சர் பி.ஏ., முருகன்


தமிழ்நாடு அரசின் சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பண்ணனின் தனி செயலராக இருந்தவர் முருகன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் முருகன் அமைச்சரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். முருகன் மூலமாக தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் அமைச்சருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதல்வர் விரிவான அறிக்கை அளிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சில தினங்களுக்கு முன்பு சொல்லியிருந்தார். அந்த அறிக்கையை மாவட்ட அதிகாரியான கண்ணன் தான் தயாரித்து கொடுக்க வேண்டும். சிப்காட்டின் விதிமீறலை கண்டித்து கடிதம் வழங்கியிருக்கும் கண்ணன் அறிக்கை அளித்தால் நிச்சயம் சிக்கலாகிவிடும். தற்போது நேர்மையான அதிகாரி கண்ணனை பணியிடை மாற்றம் செய்ய ஸ்டெர்லைட் தரப்பு முருகன் மூலம் வேலைகள் செய்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் கண்ணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு சட்ட விதிகளை மீறி சிப்காட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” - வைகோ நெகிழ்ச்சி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
"Justice has been received in the Supreme Court" - Vaiko

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள் நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன். 2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தபோது சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

"Justice has been received in the Supreme Court" - Vaiko

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (29.02.2024) ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டு தெரிவித்து இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி ஆகும். ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.