Skip to main content

காத்திருந்த சிறுவர்கள்... காரை நிறுத்திய ஸ்டாலின்! - நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 06/07/2021 | Edited on 07/07/2021

 

Stalin parked his car in Thiruvarur

 

தமிழக முதல்வராகப் பதவியேற்ற சில நாளில், 'எனக்கு பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகம் போதும்' என்று தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அன்றிலிருந்து புத்தகப் பரிமாற்றம் புத்துயிர் பெற்றது. திருமண விழா, பிறந்த நாள் விழா, சிறப்பு நிகழ்ச்சிகள் என எங்கு காணினும் திமுகவினர் புத்தகத்தை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர். ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ஊடகங்கள் உச்சிமுகர்ந்து பாராட்டின. இது வெகுஜன மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவருக்குப் பலரும் புத்தகத்தைப் பரிசளித்து வருகின்றனர். அவரும் பிறருக்கு புத்தகத்தையே பரிசாய் கொடுத்து வருகிறார். சமீபத்தில், டெல்லி சென்றிருந்த ஸ்டாலின், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொடுத்த 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற புத்தகம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வின் வீச்சு திருவாரூர் மாவட்டத்தில், 11-ம் வகுப்பு பயிலும் சுபஸ்ரீ என்ற மாணவிக்கும் நிதீஷ் என்ற 6-ம் வகுப்பு மாணவனுக்கும் வந்து சேர்ந்துள்ளது.

 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இன்று (06.07.2021) மாலை திருவாரூர் வந்தடைந்தார். இரவு, காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், சன்னதி தெருவில் உள்ள உறவினர் இல்லத்துக்குச் சென்று ஓய்வெடுக்கப் புறப்பட்டார். போகும் வழியில், பவித்திரமாணிக்கம் என்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் முதல்வர் வாகனத்தைப் பார்த்து, புத்தகத்துடன் கைகாட்டினர். இதைக் கண்ட மு.க.ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்களைப் பின்தொடர்ந்து சென்று உடனே பேசினோம்.

 

Stalin parked his car in Thiruvarur
        மாணவி சுபஸ்ரீ மற்றும் மாணவன் நிதீஷ் முதல்வருக்கு பரிசளித்த புத்தகம்

 

அப்போது பேசிய மாணவி சுபஸ்ரீ, "நான் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் (Oyster) 11-ம் வகுப்பு படிக்கிறேன். இது என் தம்பி 6-ஆம் வகுப்பு படிக்கிறான். எங்கள் அப்பா ஆட்டோ ஓட்டுநர். நாங்கள் முதல்வருக்கு, கலைஞரின் 'திருக்குறள் உரை' புத்தகத்தை பரிசளிக்க விரும்பினோம். ஆனால் எங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருப்பினும் சாலையோரம் நீண்ட நேரம் காத்திருந்தோம். எங்களைப் பார்த்ததும் முதல்வர் வாகனத்தை நிறுத்தி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். எங்களுக்கு வாழ்த்து சொன்னார். இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது" என்றார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.