Skip to main content

தந்தையின் நண்பரைக் கொன்ற மகன்; திருப்பூரில் பரபரப்பு - மூன்று மாதத்தில் நடந்தது என்ன?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Son incident father's friend in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே அமைந்துள்ளது ராயன் கோயில் காலனி. இங்குள்ள 4வது வீதியில் வசித்து வருபவர் லட்சுமணன். 35 வயதான இவர், தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். லட்சுமணன், அவிநாசி பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி கங்கா. இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இந்நிலையில், லட்சுமணனுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிறுவனத்தில் ஆர்டர் எடுக்கும்போது, அங்கு வேலை செய்த திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக மாறிய இவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதற்கிடையில், யுவராஜ் குடிநீர் கம்பனியில் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு அவிநாசிக்கு அருகே உள்ள தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  ஆனால், யுவராஜ் வசிப்பதற்கு நிலையான இடம் இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இதையறிந்த லட்சுமணன் யுவராஜை கடந்த மூன்று மாதங்களாக தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அதன்பிறகு, லட்சுமணனும் யுவராஜூம் இணைந்து குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயம், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் தான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே  வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் யுவராஜை தனியாக தங்கவைத்திருக்கிறார். இத்தகைய சூழலில், கடந்த 6ஆம் தேதியன்று யுவராஜ் தங்கியிருந்த வீடு பூட்டியே இருந்துள்ளது. அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் வள்ளியம்மாள் அந்த ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த யுவராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகு, அந்த இடத்தில் குவிந்த பொதுமக்களின் உதவியுடன் அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவராஜை கொலை செய்தது யார்? எதற்காக செய்தார்கள் அல்லது ஏதேனும் முன்விரோதமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காக மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த மோப்ப நாய் யுவராஜ் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நண்பரான லட்சுமணனின் வீட்டையே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸ் டீம், லட்சுமணனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். 

 

போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு தாக்கு பிடிக்க முடியாத லட்சுமணன் பல்வேறு உண்மைகளைத் தெரிவித்தார். அவர் சொன்ன தகவலின் படி சம்பவத்தன்று லட்சுமணனின் மகன் ரத்த கரையுடன் வீட்டுக்குள் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கேட்கும்போது தான் யுவராஜை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போன லட்சுமணன் மனைவி கங்கா, மகன் மற்றும் மகள் ஆகியோரை தென்காசிக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, லட்சுமணனின் மகன் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமணன் வீட்டில் யுவராஜ் தங்கியிருந்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடந்தது? எதற்காக லட்சுமணனின் மகன் யுவராஜை கொல்ல வேண்டும் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது, தந்தையின் நண்பரை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் திருப்பூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.