Skip to main content

பெண் தர மறுத்ததால் ஆத்திரம்; மாணவியின் தாயை கத்தியால் குத்திய மாணவன்!

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
The student did incident the mother of the woman

திருவள்ளூர் மாவட்டம் கொசவன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ பாலசாமி. இவருடைய மனைவி சந்திரகுமாரி. இவர்களது மகளான சாய் லட்சுமி பிரியா (19) சென்னை தியாகராய கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். அதே கல்லூரியில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த பரத் (21) என்ற மாணவனும், சாய் லட்சுமி பிரியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில், மாணவி சாய் லட்சுமி பிரியாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் பெற்றோரிடம் மாணவன் பரத் கேட்டதாக தெரிகிறது. ஆனால், மாணவியின் பெற்றோர் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த மாணவன் பரத், திடீரென மாணவியின் வீட்டிற்குள் புகுந்து பெண் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவியின் தாய் சந்திரகுமாரி, திருமணம் செய்து வைக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்ததால், பரத் அங்கிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சந்திரகுமாரியை குத்தினான். இதில் படுகாயமடைந்த சந்திரகுமாரி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அப்போது, சாய் லட்சுமி பிரியா கூச்சலிட்டதை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அங்கிருந்து தப்ப முயன்ற மாணவனை வீட்டுக்குள் தள்ளி இழுத்துப் பூட்டினர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த பெரியப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரகுமாரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவன் பரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தன்னுடன் படிக்கும் மாணவியின் தாயை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்