Skip to main content

10 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி ஆசிரியர் கடத்தல்; இருவர் சிக்கினர்!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழில் அதிபர். இவருடைய மகன் மணிகண்டன் (30). ஆசிரியர். இவருடைய மனைவி நியா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். குறிப்பாக, மணிகண்டன் தனது பெற்றோரின் கடும்  எதிர்ப்பையும் மீறி நியாவை கரம் பிடித்தார்.

 


சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி  அருகே உள்ள அய்யாகவுண்டர் காடு பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை  உள்ளது. 

 

arrest


வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  மணிகண்டன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை (டிச. 7) மாலை 3 மணியளவில், வழப்பாடி டவுனுக்கு வந்துள்ள நண்பர்களை பார்த்துவிட்டு வந்து விடுவதாக பள்ளியில் சொல்லிவிட்டு, மணிகண்டன்  பள்ளியைவிட்டுச் சென்றார். 

 


அன்று இரவு 7 மணியளவில், தந்தை ராஜேந்திரனை  செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மணிகண்டன், பத்து லட்சம் ரூபாய் கேட்டு மர்ம நபர்கள் தன்னை  கடத்தி வந்துள்ள அதிர்ச்சித் தகவலைக் கூறினார்.

 


இதுகுறித்து ராஜேந்திரன் மற்றும் மணிகண்டனின் மனைவி நியா ஆகியோர் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் கடத்தல் கும்பல் பேராவூரணி பகுதியில் காரில் சுற்றி வருவது தெரிய வந்தது. 

 


சேலம் மாவட்ட போலீசார் தஞ்சாவூர் மாவட்ட போலீசாரையும் உஷார்படுத்தினர். கடத்தல் கும்பலை தேடும் பணிகள் தீவிரப்படுத்தியது ஒருபுறம் இருக்க, அந்த கும்பல் கேட்டுக்கொண்டபடி பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு செல்லும்படி ராஜேந்திரனையும் போலீசார் அனுப்பி வைத்தனர். 

 


கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு பணத்துடன் சென்ற  ராஜேந்திரன், பணப்பெட்டியை கொடுக்க முயன்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அந்த கும்பலை  மடக்கிப் பிடித்தனர். ஆசிரியர் மணிகண்டனையும் பத்திரமாக மீட்டனர்.  

 


கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கினர். மற்ற இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபர்கள் பேராவூரணியைச் சேர்ந்த மகேஷ், தேனியைச் சேர்ந்த வீரா எனத் தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த மணியரசன் என்பதும் தெரிய வந்தது.

 


பிடிபட்ட நபர்களையும், ஆசிரியர் மணிகண்டனையும் போலீசார் வாழப்பாடிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், ஆசிரியர் மணிகண்டனும், தப்பியோடிய மணியரசனும் நண்பர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

இதனால், ஆசிரியர் மணிகண்டனே தந்தையிடம் பணம் பறிக்கும் நோக்கில் கடத்தல் நாடகமாடினாரா? அல்லது நிஜமாகவே கடத்தல் கும்பல் அவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிக்க முயன்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.