Skip to main content

தலித்துகள் மீது தொடரும் தாக்குதல்! நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: சிபிஎம் எச்சரிக்கை

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
communist


தலித்துகள் தொடர்ந்து தாக்குதல் தொடுப்பவர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எச்சரித்தார்.

இதுகுறித்து நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

கொலை, கொள்ளை, வழிப்பறி என புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடாந்து சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்து வருகிறது. சாதி ஆதிக்க வெறியர்களால் தலித்துகள் மீதான தாக்குதல் சமீப காலங்ளில் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கோட்டையைச் சேர்ந்த எங்கள் கட்சியின் மாவட்டக்கு உறுப்பினர் ஆர்.வாசு. இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஊரணிபுரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை பேசித் தீர்த்து வைத்ததற்காக சாதி ஆதிக்க வெறியர்கள் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர். வாசு தலித் என்பதன் காரணமாகவே இத்தகைய தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வாசு கொடுத்த புகார் மனுமீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வாசு உள்ளிட்ட தலித்துகள் மீதும் பொய்வழக்குப் பதிவுசெய்து பழிவாங்குகிறது காவல்துறை.

பழைய கந்தர்வகோட்டையில் மாட்டுப் பொங்கல் திருவிழாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மாடுகளை அவிழ்த்து விட்ட பிறகே தலித்துகள் அவிழ்த்துவிடுவது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த பொங்கலன்று பிற்படுத்தபட்ட வகுப்பினரின் ஒரிரு மாடுகள் பாக்கி இருக்கும்போது வெடிச்சத்ததைக் கேட்டு மிரண்டதால் தலித் வீட்டில் நின்ற ஒரு மாடு அவிழக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் தலித்துகளின் வீடுகளுக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு தரப்பினரிடமும் புகார் பெற்றுக்கொண்டு சமாதானமாகப் போகும்படி காவல்துறையினர் கட்டப் பஞ்சாயத்துப் பேசுகின்றனர்.

இதேபோல, புதுக்கோட்டையை அடுத்து மேலூர் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை ஒலிபெருக்கி வைத்து தலித்துகள் கொண்டாடியதைப் பொருத்துக்கொள்ள முடியாமல் சாதி வெறியர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதிலும் காவல்துறையினரின் நடவடிக்கை பாரபட்சமாகவே இருந்துள்ளது. அன்னவாசல் ஒன்றியம் பேயால் வலையபட்டியில் நடைபெற்ற அன்னதான விழாவில் தலித் இளைஞர்கள் கைலியை மடித்துக்கட்டித் திரிந்ததற்காக அவர்களை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.

ஆலங்குடியை அடுத்து மேலநெம்பக்கோட்டை, வெள்ளாகுளம் உள்ளிட்ட இடங்களில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதியரை பிரித்து வைக்கும் முயற்சியில் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வட மாநிலங்களில் ‘காப’ என்ற பெயரில் காதலர்களை சித்திரவதை செய்வது, அபராதம் விதிப்பது, கொலை செய்வது நடைமுறையாக உள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ‘நாடு’ என்ற பெயரில் இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றும் நடவடிக்கை இருப்பது தெரிய வருகிறது.

சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 2012-ல் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் நபர்கள்மீது காவல்துறையினர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலத்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும் என்றார்.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு நிவாரணம் வழங்கவில்லை. இதில், விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். நிகழாண்டிலும் தமிழகம் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலையும், சம்பளமும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் மாதம் பல்வேறு அமைப்புகளை இணைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு உள்ளோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தான் அவரது படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைத்ததற்கு எதிர்க்கிறோம். அவரோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இல்லையென்பதால் சிறையில் இல்லை. அவ்வளவுதான். குற்றவாளிகளில் ஆண், பெண் எனப் பிரித்துப்பார்க்க முடியாது. ஜெயலலிதாவின் படத்தை வைப்பதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கிறோம் என்றர். பேட்டியின் போது கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம், செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கிப் போய் விடுவோம்” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Interesting thing happened when Dindigul Srinivasan and CPM candidate campaigned

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக  கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்கும்  போட்டியிடுகின்றனர். அதுபோல் பிஜேபி கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர்  திலகபாமாவும் போட்டியிடுகின்றனர். இப்படி திண்டுக்கல் பாராளுமன்ற  தொகுதியில் மும்முனை போட்டி மூலம் தேர்தல் களமும் சூடுபிடித்து வருகிறது. 

வேட்பாளர்களும்  மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் திண்டுக்கல் மாநகராட்சி  பகுதியான வேடபட்டி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்  தனது ஆதரவாளர்களுடன் திறந்த ஜீப்பில் மக்களை சந்தித்து வாக்கு  சேகரித்துக் கொண்டு வந்தனர்.

அப்போது திடீரென எதிரே  எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரான முகமது முபாரக்குடன் முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசனும் தனது ஆதரவாளர்களுடன் இரட்டை இலைக்கு வாக்கு  கேட்டு வந்து கொண்டிருந்தார். இப்படி இரண்டு வேட்பாளர்களும் தனது  ஆதரவாளர்களுடன் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது இரண்டு  வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கைகூப்பி வணங்கிக் கொண்டனர். 

அப்போது உடன் இருந்த சீனிவாசனோ, சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை பார்த்து ‘நல்வாழ்த்துக்கள் சச்சிதானந்தம் நமக்குள் சண்டை வேண்டாம் நாம்  ஒதுங்கி சென்று விடுவோம் மக்களிடம் ஆதரவு கேட்போம் யாருக்கு ஆதரவு  அளிக்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்வோம் மக்கள் தீர்ப்பே மகேசன்  தீர்ப்பு...’ என்று நகைச்சுவையாக பேசினார். அதைக் கண்டு கூட்டத்தில் இருந்த  இரண்டு கட்சி ஆதரவாளர்களுமே சிரித்து விட்டனர். அதைத் தொடர்ந்து  இரண்டு வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்களுடன் ஒதுங்கிச் சென்றனர்.