Skip to main content

பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம்! 

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

school student srimathi incident police in cuddalore district

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6- ஆம் வகுப்பிலிருந்து படித்து வந்துள்ளார். தற்போது 12- ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த ஜூலை 13- ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

 

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 14- ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதன் ஆய்வு அறிக்கையில் மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது. 

 

இதனால் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் பெற்றோர்கள் இடத்தில் எழுந்தது. அதையடுத்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற்கூராய்வு மற்றும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி மனு தொடுத்தனர். இதற்கிடையில் கடந்த ஜூலை 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவி மரணத்திற்கு நீதிக் கேட்டு நடைபெற்ற போராட்டம் மாபெரும் கலவரமாக மாறியது. 

school student srimathi incident police in cuddalore district

50- க்கும் மேற்பட்ட பள்ளிப் பேருந்துகள், வாகனங்கள் உள்ளிட்டவை எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. அதேசமயம், பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 18- ஆம் தேதி அன்று பள்ளி மாணவியின் உடலை மறு உடற்கூராய்வுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, ஜூலை 19- ஆம் செவ்வாய்க்கிழமை அன்று மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 

 

இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரைச் சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

இந்நிலையில் நேற்று (22/07/2022) பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்து 11 நாள் கடந்து இன்று (23/07/2022) காலை 07.00 மணிக்கு மாணவியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மாணவியின் சொந்த கிராமமான பெரியநெசலூருக்கு சடலம் கொண்டு வரப்பட்டது.  எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி தலைமையில் சுமார் 700- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அக்கிராமத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.  மேலும் கண்ணீர் புகைக்குண்டு வாகனம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா ஆகிய வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

school student srimathi incident police in cuddalore district

கடுமையான பரிசோதனைக்கு பிறகே வாகனங்களை கிராமத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். வெளியூர் ஆட்கள், பிற இயக்கம் மற்றும் அமைப்பினருக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் சரியாக, காலை 11.00 மணியளவில் மாணவி ஸ்ரீமதிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

 

இறுதிச்சடங்கில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு இடுகாடு வரை  ஊர்வலமாக வந்தனர். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் இடுகாட்டில் மாணவியின் உடலுக்கு அவரது பெற்றோர்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்த பின்பு மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.