பள்ளிப் பேருந்து விபத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில் 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அவரின் தந்தை மாயவேல் தாக்கல் செய்த வழக்கில், உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய் நல்லூரில் உள்ள தனியார் பள்ளியான போன் நேரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தன்னுடைய 7 வயது மகன் முகுந்தன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளி சென்று விட்டு அப்பள்ளியின் வாகனத்தில் வீடு திரும்பிய போது, பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் பின் சக்கரம் சிறுவனின் தலையில் ஏறி, முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவனின் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.