Skip to main content

சேலம் சிறையில் குண்டாஸ் கைதி தற்கொலை; பரபரப்பு தகவல்கள் அம்பலம்! 

Published on 10/11/2021 | Edited on 11/11/2021

 

salem prison incident magistrate investigation


சேலம் சிறையில் குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கீழ்மாட்டையாம்பட்டி பூவான்வலவு பகுதியை கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த மே மாதம் 1- ஆம் தேதி வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டுக்குத் திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களிலும் மகளை தேடிப்பார்த்தனர். 

 

அதே ஊரைச் சேர்ந்த தறி தொழிலாளி தனபால் என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே, அப்பகுதியில் ஒரு மாமரத்தின் அருகே சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். 

 

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் தனபாலை பிடித்து விசாரித்தனர். 

 

சிறுமிக்கு நுங்கு வெட்டி தருவதாகக் கூறி தனபால் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றதும், மறைவான இடத்தில் வைத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது கத்தி கூச்சல் போட்டதால், சிறுமியை கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. 

 

இதையடுத்து தனபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். 

 

கடந்த ஜூன் மாதம் 5- ஆம் தேதி, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. நவம்பர் 9- ஆம் தேதியன்று தனது தாயாரிடம் செல்போன் வீடியோ அழைப்பு மூலம் சிறையில் இருந்தவாறே தனபால் பேசினார். அப்போது தன்னை சீக்கிரமாக ஜாமீனில் எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். 

 

குண்டர் சட்டத்தில் கைது ஆனதால் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என தாயார் தெரிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தனபால், தனது சிறை அறைக்குள் சென்று தான் வைத்திருந்த துண்டை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

 

இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறைக்கைதி தற்கொலை என்பதால் மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில், மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தனபாலின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.