தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தொடர்ந்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில் பொன்னேரி அருகே பலத்த காற்றால் அரசு பேருந்து மேற்கூரை பறந்து சென்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம், ஊத்துக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகமாக இருந்த நிலையில் இன்று பலத்த காற்று வீசியது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் இருந்து பொன்னேரி வழியாக செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தின் மேற்கூரை பலத்த காற்றால் பிய்த்துக் கொண்டு சாலையில் பறந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கூச்சலுடன் வெளியே இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.