![Robbery Government school teachers house](http://image.nakkheeran.in/cdn/farfuture/ICPc88_0we7aR5jIHIBf-qgFErDy8QYmNKc1-sKgHOE/1662203954/sites/default/files/inline-images/police-car_32.jpg)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சாய் லட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் சசிகுமார். இவர் கருவம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா திண்டிவனம் அருகில் உள்ள விழுக்கம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம்போல் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவன் மனைவி இருவரும் ஒன்பது மணி அளவில் தங்கள் பணி செய்து வரும் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். பணி முடிந்து மாலை 5 மணி அளவில் கணவர் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 40 சவரன் நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம், 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா தலைமையில் போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடையுங்கள் சேகரிக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிற்கு ராக்கி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டிலிருந்து செஞ்சி ரோடு வரை ஓடி ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நின்று விட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரோஷனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.