
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மாநில அளவிலான 'கோரிக்கை மாநாடு' சேலம் மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில், அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், சட்டமன்றத் தேர்தல் நடத்தும் பணி, பேரிடர் மேலாண்மைப் பணி உள்பட பல்வேறு முக்கியப் பணிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் 10 அம்ச கோரிக்கைகளான “அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், வருவாய்த் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய நிலையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 10 லட்சமாக உயர்த்திட வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இன்று முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த்துறையினர் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தினை தொடர்ந்து ஈரோடு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள் இன்றி அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைப்போல பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், நம்பியூர், சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.