Skip to main content

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
Rameswaram fishermen struggle indefinitely

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் நேற்று முன்தினம் (31.07.2024) அதிகாலையில் வழக்கம் போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் படகு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரான கார்த்திகேயன் என்பவரது விசைப் படகு மீது மோதியுள்ளது.

அந்த படகில் இருந்த மலைசாமி, ராமச்சந்திரன், மூக்கையா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகினர். இதில் படுகாயமடைந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதில் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. ராமச்சந்திரன் என்ற மீனவர் மாயமாகியுள்ளார். இதற்கிடையே ராமேஸ்வரத்தில் சுமார் ஐந்து மணி நேரமாக மீனவர்கள் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நேற்று (01.08.2024) போராட்டம் நடத்தினார். இதனால் அந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இத்தகைய சூழலில் தான் இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமி குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. இந்நிலையில் இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் என அறிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழக மீனவர்களைக் கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரையும் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்