
அண்மையில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சீமானுக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.க மற்றும் திமுகவினரின் புகாரில் தமிழகத்தில் 60 இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் துரைமுருகனும் சீமானை மறைமுகமாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சீமானின் பேச்சை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எல்லை மீறி, மனம்போன போக்கில் பெரியாரைச் சீமான் கொச்சைப் படுத்தியுள்ளார். சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சீமானை நீதிமன்ற கூண்டில் ஏற்றி உரிய தண்டனை உடனே வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.